Tuesday, 11 February 2014

வரலாறும் வற்றிய ஆறும்


எங்கள் வரலாறும்
வற்றிய ஆறும் ஒன்றுதான்!

கால்கடுக்க
நடந்த ஆறுகள் 
பொலிவிழந்து
வற்றிய மார்போடு
சுவடுகளை இழந்து...

வந்தேறிகளின் தேடல்களில்
அடிக்கடி
தூசு தட்டப்பட்டு
துணிவிழந்த துச்சாதனாய் நாங்கள்

நெஞ்சுக் கூடுகளில்
ஈரப்பசைகள்
இன்னும் ஒட்டிக் கொண்டிருக்கும்
வானார்ந்த எதிர்பார்ப்புகளோடு
துளிகளுக்கு
விண்ணப்பங்களைப் போட்டு
விண்ணுக்குத்
தவம் கிடக்கின்றோம்
அருவியா விழப்போகிறது?

வீதிகளில் கத்திக் கத்தி
தெரு ஆர்ப்பரிப்புகளில்
கோரிக்கைக் கொடிகள்
தொண்டை குழாய்கள்
காய்ந்ததுதான் மிச்சம்

மாற்றங்கள்
படையெடுத்து வருமென்று
வீதிகளில் விழிகளைப்
பதித்து வைத்தோம்

காணல் நீருக்குள்
பூத்துப்போன இருவிழிகள்
அமுதசுரபியும் இல்லை
அதனால் பிச்சைப் பாத்திரங்களை
வெறுமையோடு
கைகளில் ஏந்திக்கொண்டு
தட்டித் தட்டிக் கேட்கிறோம்
நொந்துபோன கரங்கள்

விரதங்களுக்கும் வேண்டுதல்களுக்கும்
முகங்காட்ட
கடவுளின் முன்னே
மண்டியிட்டு
முட்டி முட்டிக் கேட்கிறோம்
இடிந்துபோன இளமனசு

அறுந்துபோன
நம்பிக்கைக் கம்பிகளில்
கம்பீர நடைப் பயணம்
ஏலனமாய்க் கைத்தட்டி
வேடிக்கைப் பார்க்கும் கூட்டம்

ஒவ்வொரு முறையும்
தொங்கும்போதும்
கால் இடறி
தலை கீழாய் விழும்போதும்
உலகம் அதிரும்
சிரிப்பலைகள்

விழுவது தொடர்கதையாய்
எழுவது எப்போது?
ஏமாற்றத்தோடு திரும்புகிறோம்
இன்னும்
ஒட்டிக்கொண்டிருக்கும்
நம்பிக்கைக் கம்பிகள்.



No comments:

Post a Comment