Tuesday, 11 February 2014

சமாதி நிலை


மூன்றாவது நிலை
நேற்றோடு மலையேறிவிட்டது
இன்றுமுதல் நான்காவது நிலை
நமக்கு

ஏமாளிகளுக்கு
ஏமாற்றம் புதிதல்ல!

கவலைப்படுவதற்கு ஒன்றுமில்லை
பரிசுகளையும் பாராட்டுகளையும்
இழந்த மனசு

இருபது இருபதும்
ஒரே மலேசியமும்
நாளைய நம்பக நாட்கள்
இருந்தும் நமக்கென்ன?

நகரும் நாட்களில்
நாடும் வளர்கிறது
நமது நகமும் வளர்கிறது

தொழிற்புரட்சியில்
நறுக்கப்படும் காடுகளும்
நெறிக்கப்படும் விலங்குகளின்
மரண ஓலங்களும் காற்றில்

நகங்களை விட்டு
நமது விரல்கள் நறுக்கப்படுகின்றன
பல விண்ணப்பங்களில்

விரல்களுக்குப் பிறகு
கட்டப்பட்ட கரங்களும் அறுபடலாம்
நாம் முடவனாய்
ஆனால்
இன்னும் மூடனாய் இல்லை!

ஒவ்வொரு உருபுகளாய்க்
கிள்ளிப் போட்டாலும்
மீண்டும் மீண்டும் முளைத்தெழிவோம்!

பாவம்
அவர்கள் ஏமாந்து போவார்கள்
தொடர்ந்து நறுக்கட்டும்
ஏமாளிகளுக்கு
ஏமாற்றம் ஒன்றும் புதிதல்ல.



No comments:

Post a Comment