Tuesday, 11 February 2014

நிரம்பி வழியும் தரித்திரம்


நாமும், இவர்களும், அவர்களும்
எல்லோரும்
ஒன்றாகத்தானே
புதையல்களைத் தோண்டுவதற்கு
இந்தக் கரைகளில்
தட்டுத் தடுமாறி
பாதங்களைப் பதியம் வைத்தோம்?

அதெப்படி
இன்னும் நமது பாத்திரங்களில் மட்டும்
தரித்திரம்
நிரம்பி வழிகிறது?

இவர்களும் அவர்களும்
எப்படி எப்படியோ
இறகுகளைச் சேகரித்து
வானத்தை முட்டும்
ஏணிப் படிகளில் ஏறி
ஓசோன் கூறைக்கு
வெள்ளையடிக்கிறார்கள்?

இன்னும்
நமக்கு எட்டவில்லை
வானத்து வில்லில்
ஊஞ்சல் கட்டுவதற்கு!

நொந்துபோன மனதோடும்
எரிந்துபோன வயிரோடும்
எலும்புக்கூட்டுக்குள்
ஈரடிக்கும் ஆறடிக்கும்
இழவுச் சண்டையில்
கல்லறையாய் நிற்கிறோம்

அவர்களும் இவர்களும்
நாளைய நாட்களுக்கு
நம்பிக்கை பூட்டுவதற்கு
அங்கும் இங்குமாய்க்
குடிசைகளைப் போட்டார்கள்
அதன் கூறைகளே
அவர்களுக்கு வானமானது!

நாமும் சலைத்தவர்களா?
முயலாமல் இல்லை!
அடிக்கல் நாட்டு விழாக்களோடும்
சிறப்புப் பூசைகளோடும்
அடிக்கடி ஒத்திவைக்கப்படுகிறது
கட்டட அடிக்கல் நாட்டுவிழா
அதனால்
இன்னும் இங்கு
வானமே கூறைகளாய் நிற்கிறது

அவர்களும் இவர்களும்
இரட்டைமாடிக் கோபுரத்தின் உச்சியை
விலைக்கு வாங்கி
எழுச்சி மாநாடுகளைத்
தொடர்கதைகளாய் நடத்தும்போது

ஒரு முச்சந்திக் கூடவா
கிடைக்காமல் போகும்
எங்களுக்கும்
ஒரு மாநாடு நடத்துவதற்கு
அடுத்த வீழ்ச்சியை நோக்கி!


No comments:

Post a Comment