நேசத்திற்குரிய
கோழையே!
உன்னால்
என் பேனா
மீண்டும்
உயிர்த்தெழுகிறது
கார்காலத்தில்
ஒரு நாள்
வியர்த்துக் கொட்டிய
ஓர் இரவில்
உன் நனவு
என் உறக்கத்தைக்
களைத்துப் போட்டது.
நீயும்
உன்னைப் போன்றோரும்
அடிக்கடி
உசுப்பி விடுகிறீர்கள்
எங்கள் தலைவர்களை
அதனால்
எப்பொழுதும்
ஐந்தாண்டுகளுக்கு
ஒரு முறை
அறிக்கை விடுபவர்கள்
இப்பொழுது
அடிக்கடி விடுகிறார்கள்
உன் மரணத்தில்
உன்னை
வார்த்தைத் தோட்டாக்களில்
துளை போடுவதற்குள்
கொஞ்சமாய்ப்
பாராட்டுகிறேன்
இந்த
அசட்டுத் தைரியம்
எமனுக்குக் கூட
வராது
எதிர்ப்பார்ப்புகள்
கடலாய்க்
கம்பளம் விரிக்க
எப்படி
இந்த
ஒற்றையடிப் பாதையில்
சிந்து பாடுகிறாய்?
கிடைக்கவில்லையென்றால்
எடுத்துக் கொள்கிறாயே
உயிரைத்
தற்கொலையென்ற
உடன்படிக்கையில்
அப்படியென்றால்
நீ
கருவிலேயே
விலகியிருக்க வேண்டும்
மற்ற
சகோதர் அணுக்களுக்கு
வழிவிட்டு
அறுபதுகளில்
அறுத்துப்போட வேண்டிய
ஆசை விழிதுகளை
இருபதுகளிலேயே
அறுத்து விட்டாயே?
தன்னம்பிக்கை
ஆயுதங்களை இழந்து
போர்க்கள முச்சந்தியில்
நீ மட்டும்
நிராயுதபாணியாய்.....
நிம்மதியாய்
நீ மட்டும்
பாடையில்
தாயும் தந்தையும்
உடன் பிறப்புகளும்
உடன்கட்டையில்...
கோழையே?
கொலை வெறியனே?
எதற்கு
ஆர்ப்பரிக்கிறாய்
சுனாமியாய்
வழுக்கிவிழும்
சூரியனும்
அவிந்துபோகும்
நட்சத்திரமும்
தேய்ந்துபோகும்
நிலவும்கூட
மீண்டும் மீண்டும்
உதிர்ந்த மலராய்
உயித்தெழும்போது
அஃறிணையும்
உயர்திணையாய்.........
நீ மட்டும்
அஃறிணையாய்.!
நண்மர் மணி, உங்கள் சொற்போரோடு நான் சில சமயம் மற்போர் செய்கிறேன்.பின்னர் மெல்லப் புரிந்து உவப்படைகிறேன்.உங்கள் வீச்சு வில்லம்பாய்ப் பாய்கிறது.இப்படி சொற்பமான கவிஞர்களையே காண முடிகிறது இந்த மலேசிய மண்ணில்.எப்போதுமே வலைப்பூவுலக்குள் நுழைபவர்கள் நம் படைப்பை பலர் படிப்பார்கள் என்று வந்து பின்னர் அது நடக்கவிடில் சோர்ந்து போகிறார்கள். ஆனால் நாம் புனைவதை வாசிக்கும் சொற்ப மனிதர்களே நம் ஆதர்ஸர்கள். கவிஞனுக்கு அவ்வளுவுதானே கிட்டும்.அவர்கள்தானே நம் வாடிக்கையாளர்கள். அவர்களுக்காக தொடர்ந்து எழுதுங்கள் எழுதுங்கள்.
ReplyDeleteநான் நானில்லை...
ReplyDeleteநினைவிலில்லை
மறந்துபோகிறது
ஞாபகப்படுத்துவதற்கு
ஒவ்வொரு கோணத்திலும்
தோய்வுகளில்
சரியும் தேகம்
அத்துமீறிய
இருள் திரள்கள்
ஒரு வெளிச்சத்திற்குள்
மறந்துபோன
மறதி கூட்டுக்குள்
முனகல்
விரிந்துகிடக்கும்
பாதைகளில்
முடமான பாதம்
விடியலில்கூட
மூடியே கிடக்கும்
விழிகள்
வெறுமையாய்போன
பஞ்ச மூலங்களில்
அழுகிய வீச்சம்
விரல் இடுக்குகளில்
பற்றவைத்த
தீப்பந்தங்களில்
குளுமை
நானும் நானுமாய்
தேடிக்கொண்டிருக்கும்
நான்.
அப்பா இல்லாத தீபாவளி
ReplyDeleteஅப்பொழுது இல்லாத வலி
இப்பொழுது
எங்கிருந்து வந்தது?
வெள்ளி முளைக்கும்
ஒரு தீபாவளி
தீபாவளி நெருக்குதல்
அக்கம் பக்கமெல்லாம்
ஒரே பரபரப்பு
ஆர்பரிப்பு
பட்டாசுகளும் வானவேடிக்கைகளும்
வெறுச்சோடி கிடந்தது
என் வீடும்
என் மனமும்
எனக்குள் எல்லாமே சூன்யமாய்
நாற்பத்து ஐந்து ஆண்டுகள்
எத்தனை தீபாவளிகள்
அப்பாவோடு
ஞாபக நாட்களில்
இன்னும் பசுமையாய்
ஒட்டிக்கொண்டிருக்கிறது
என்னிடமும்
இந்த மண்ணிடமும்
சொல்லிக் கொள்ளாமல்
அப்பா அவசர அவசரமாய்
விண்ணுலகத்திற்கு
விடைபெற்ற
இந்த ஆண்டு
இந்த தீபாவளியல்ல
எல்லா தீபாவளிகளையெல்லாம் கூடவே
கொண்டுபோய் விட்டார்
நினைத்துப் பார்க்கிறேன்
ஒருமுறையாவது
அவருக்கு
நன்றி சொல்லியிருக்கிறேனா?
வேள்வியாய்த் துடிக்கும்
மனம்
கடந்த தீபாவளிகளை
அசைபோட்டவாறு
ஆசை ஆசையாய்
அவர் வாங்கிக் கொடுத்த
அந்தப் புத்தாடைகள்
எனக்குப் பிடித்ததோ
நினைவிலில்லை
அவருக்குப் பிடித்திருந்தது
ஒன்றே ஒன்று என்று
எனக்கு
எத்தனை சலுகைகள்
அன்பாய் அவர்
தட்டிவிட்ட பொழுதெல்லாம்
நொந்து போனவன்
இப்பொழுது
நினைத்துப் பார்க்கிறேன்
இந்த உச்சத்தில்
நான் ஏறிநிற்கும்
ஏணிப்படிகள்தான் அவை
அந்த வடுக்கள்
நேற்றோடு
காணாமல் போனது
அவரில்லா ஓர் ஏக்கத்தில்
அப்பாவின்
அந்தச் சின்ன வீடு
எத்தனை முறை
ஏளனமாய் வெறித்திருக்கிறேன்
வசதிகளே இல்லை என்ற
என்னுடைய குற்றச் சாட்டு
உள்ளுக்குள் முள்ளாய்த் தைக்கிறது
அது ஒரு குருவிக்கூடு
அப்பாவும் அம்மாவும்
உடன் பிறப்புகளோடு நானும்
அன்புச் சங்கிலியில்
கட்டிப்போட்டது
ஒவ்வொரு நாளும்
அந்த வீட்டுக்குச் சென்று
திரும்பும்போதெல்லாம்
அப்பாவின் நினைவுகள்
எனக்குள் உயிர்த்தெழுகின்றன
வீட்டின்
ஒவ்வொரு மூலையும்
மௌனமாய் ஊடுருவும்போது
இப்போதுதான்
அதன் நேர்த்தியும்
அப்பாவின் உழைப்பும்
கண்ணில் படுகிறது
அப்பா சிந்திய
வேர்வைத்துளிகளின் மணம்
இன்னும் காற்றில் கலந்து
அந்தச் சின்ன வீட்டிற்குள்
தோரணமாய்
சுண்ணாம்புக் கற்களைக்
கொதிக்கவைத்து
நான் விரும்பிய வண்ணத்தில்
தோய்த்து
சுவர்களுக்குப் பூசிய
அந்த ஒவ்வொரு ஆண்டும்
அடுக்கடுக்காய் மனத்திரையில்
இன்னும்
சந்தனம் பூசிக்கொண்டிருக்கிறது
அன்றைய நாட்களில்
சரவெடிகளுக்குப் பயந்து
தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்த
பயவுணர்கள்
இடம் தெரியாமலேயேபோனது
அப்பா என் கைகளைப் பிடித்து
தைரியத்தைப் பற்றவைத்தபோது
சைக்கிள் பயணத்திலேயே
அவருடைய
பாதி ஆயுள் கழிந்தது
நல்ல ஆரோக்கியத்தோடு
பின்னால் உட்கார வைத்து
மூச்சிறைக்க
அவர் பயணித்த
அந்த மலைப்பகுதிகள்
இன்னும் எனக்குள் மலையாய்
இத்தனை தீபாவளிகளை
நான் அவரோடும்
அவர் என்னோடும்
மகிழ்ச்சிப் பகிர்வுகள்
பட்டியலுக்கு அப்பால்
இன்று
அப்பா என்னோடு இல்லை
நான் மட்டும் தனிமையில்
அர்த்தம் தொலைந்துபோன
ஒரு தீபாவளி
பொலிவிழந்த
என்னுடைய பெரிய வீடு
புத்தாடைகள் இல்லை
பட்டாசுகளும் இல்லை
பதார்த்தங்களின் மணமும் இல்லை
இன்னும்
அந்தச் சின்னவீடும்
அப்பாவின் நினைவுகள் மட்டும்
இந்தத் தீபாவளி இரவில்
அகலாய்
மனதிற்குள்
ஒளி பிழம்பாய்ச்
சுடர் வீசுகிறது.
திருவோடு ஒரு தெருவோடு
ReplyDeleteகோரிக்கைகளைப்
பேசிப் பேசியே
பழக்கப்பட்டுப் போய்விட்டது
எழுவதும், உழுவதும்
கட்டிலில் விழுவதுமாய்
நகரும் நாட்கள்
கனவுகளின் பட்டியலில்
அடுக்கடுக்காய்
வானத்தை முத்தமிடும்
நட்சத்திரக் குவியல்
பொதுமைப் பார்வையில்
பாரெங்கும்
புதுமைகள் செய்தோம்
சுழற்றி எறியும் உடைகளாய்
ஒவ்வொன்றாய் இழந்தோம்
உடைமைகளை
அலட்சிய பூகம்பத்தில்
புதைந்தும் கலைந்தும்போன
பள்ளிகளும் கோவில்களும்
தொழிற்புரட்சி தோண்டிய
பிணக் குழிகளில்
சமாதியான தோட்டங்கள்
கேட்காமலேயே விட்டதால்
நாணத்தோடு
விலகிச் செல்லும்
மறந்துபோன உரிமைகள்
சாணையில்லாமல்
மழுங்கியே கிடக்கும்
அரசியல் வாள்கள்
இருந்தும் என்ன?
மேடைகள்
எங்கள் அழகுத் தமிழுக்கு
மணிமகுடங்கள்
அதனால்
ஊரான் பிள்ளையை
நம்பிக்கையோடு ஊட்டி வளர்க்கின்றோம்
எங்கள் பிள்ளைகள்
தெருவின் மூலை முடுக்குகளில்
படரும் வெளிச்சமாய்க்
கையில் திருவோடு!
நூல் வெளியீடு
ReplyDeleteசுவரொட்டிகள்
வரிசையாய் பதாகைகள்
வாரியிறைத்த கையேடுகள்
மாவிலையும் தோரணமுமாய்
மண்டப வாசலில்
வரவேற்கும் கோலங்கள்
மேடை சுவடிப்பு
சுண்டியிழுக்கும் சுவர் விரிப்பு
கம்பள விரிப்பில்
அணிவகுக்கும் விருந்தினர்
வெளியீடு
கொஞ்சகாலம் ஒத்திவைப்பு
வாசகர்கள் இன்னும் வரவில்லை
தட்டுப்பட்ட தலைகளை
விரல் விட்டு எண்ணிப்பார்த்தேன்
ஒரு பத்து உருப்படி தேரும்
பிரமுகர்கள்
இனிக்க இனிக்கப் பேசினார்கள்
எழுதிவந்த கட்டுரைகளை
வந்தவர்களைவிட
மேசைகளில் அடுக்கிய புத்தகங்கள்
அதிகமாய்
வந்தவர்களிடம்
சிதறிய கொஞ்சம் சில்லறைகள்
வறட்டுப் புன்னகையோடு
எழுத்தாளரின் ஏற்புரை
எதிர்ப்பார்ப்புகளோடு
முன்வரிசையில் பதிப்பகத்தார்.
அந்திம காலங்கள்
ReplyDeleteவாழ்க்கையில்
மற்றுமொரு பரிணாமம்
அழையாமல் எல்லா கோணங்களிலும்
நரைகளுக்குச் சாயம் பூசுகிறது
முகச் சுருக்கங்களில்
மெல்ல எட்டிப்பார்க்கும்
கடந்த கால நினைவுகள்
கொடுத்ததும்
விட்டுச் செல்வதும்
இங்கு நினைவிலில்லை
வாங்கியதும்
வேண்டுமென்றே
மறதிக்குள் புதைத்ததும்
நனவுக் கரைகளை அரிக்கின்றன
கடனாளி என்ற
குற்றவுணர்வுகளில்
மனசாட்சி சிறை வைக்கிறது
ஆயுள் கைதியாய்
பாவமன்னிப்புகளுக்கு அப்பால்
நாட்களை அசைபோட்டவாறு
இளமை முறுக்குகளுக்கு
முதுமை முக்காடு மாட்டிவிட்டு
தள்ளி நின்றவாறு
வேடிக்கைப்பார்க்கிறது
வாழ்க்கையின்
வரவு செலவு கணக்குகளின்
நீட்டோலையில்
செலவு மட்டும் மிஞ்சியிருக்கிறது
எஞ்சியிருப்பது
சொற்ப மணித்துளிகள்தான்
அதற்குள் கடனை அடைப்பது
அபூர்வம்தான்
அதனால்
இறைவா
இன்னுமொரு பிறவியைக் கொடு
எனது வரவில்
சில்லறைகளையாவது
வைக்க வேண்டும்
எதிர்பார்ப்புகளோடு நகரும்
அந்திம நாட்கள்!
கொஞ்சம் தோள் கொடுங்களேன்
ReplyDeleteமெல்லவும் முடியாமல்
துப்பவும் முடியாமல்
மன இடுக்குகளில்
சிக்கிக்கொண்ட சுமைகள்
அடிக்கடி மிரட்டிப்பார்க்கிறது
உடலெங்கும் பீதியில்
உறைந்துபோகும்
உணர்வுகள்
நகர்த்த முடியாமல்
நட்டாற்றில்
பரிதவிக்கவிட்டு ஏலனமாய்
நகர்ந்து செல்லும் நாட்கள்
வேதனைகளை
ஒவ்வொரு நாளும் விழுங்கி
அமில நச்சுகளில்
மனம் புண்ணாகிப்போனது
வாழ்க்கையின் ஒரு மூலையில்
வெறுப்பு முடி தறித்து
சிம்மாசனம் போட்டுக் கொண்டதால்
உடல் பிண்டமாய்
நடைபிணமாய்
மனக் குப்பைகளின் வீச்சம்
எல்லாமே சூன்யமாய்
நம்பிக்கை நரம்புகள்
அறுந்து
தளர்ந்துபோன வாழ்க்கை
வாழ்க்கையின்
உண்மையான
முகவரியைத் தேடுவதில்
அடுக்கடுக்காய்த் தோல்விகள்
விழியணைகளை
முட்டிக்கொண்டு
தலையணைகளை
ஈர்மாக்கிப் பார்க்கும்
இரவுகள்
ஆறுதலுக்காக
இளைப்பாறிப் போகும்
பழக்கப்பட்ட முகங்கள்
தோள்கள் வலுவிழந்து
நகரும் மணித்துளிகளில்
துடிக்கின்றன
வேதனை மூட்டைகள் கணக்க
தேகம் சரிவதற்குள்
இறுதி மூச்சுக்காற்று
விடை சொல்வதற்குள்
இறக்கியே ஆக வேண்டும்
பரிவோடு
பார்வையை வீசி எறிகின்றேன்
யாராவது
தோள் கொடுங்களேன்.
நினைவில் இனிக்கும் நினைவுகள்
ReplyDeleteகடந்தகால நினைவுகளில்
கல்லூரி வாசலின் கதவு
திறந்தே கிடக்கிறது
இன்னும் விழித்திருக்கின்றன
பழைய முகங்களோடு நானும்
கல்லூரிக்காலம்
கரும்பின் வேர்பகுதியைச்
சுவைத்ததாய் உணர்வு
சுமைகளைக் கண்டிராத
விடுதலை காலம்
தோள்களுக்கு
சிக்கல்களைத்
தொட்டுப்பார்க்காத
தெளிவான நீரோடையாய்
சலசலக்கும் மனசு
ஒவ்வொரு முனையிலும்
எதார்த்தமாய்
பார்வைகளைப் பதியம் செய்யும்
புதிய முகங்களின் கைக்குலுக்கல்
உலகத்தின் விசாலத்தை
உள்ளங் கைகளில்
அளந்து பார்ப்பதற்கு
அற்புதமாய்ப் பாடம் சொன்ன
விரிவுரை மண்டபங்கள்
எச்சில் உமிழ்ந்து
காப்பாற்றிய தேநீர்
கோப்பைகள்
கரங்களை இன்னும் சுடுகிறது
மூன்று ஆண்டுகளாய்
கொட்டமடித்து
கூத்தும் கும்மாளமும் போட்ட
விடுதிகளின் அனுபவங்கள்
உள்ளுக்குள் வடுக்களாய்
அழகிய நிலாக் காலங்களில்
கரங்களைக் கோர்த்துக் கொண்டு
தோள்களின்மீது சாய்ந்தும்
கைப்போட்டும்
துள்ளி நடைப்பயின்ற
அகன்ற சாலைகள்
மனத்தரைகளில் நீள்கின்றன
காலார நீட்டிய கால்களோடும்
உட்கார்ந்தும் சாய்ந்தும்
படுத்தும் புரண்டும் இளைப்பாறிய
நிழல் மரங்களும்
குளக்கரைகளும்
மனக்கரைகளில் தென்றலாய்
தேர்வுக்காலங்களில் மட்டுமே
விடிய விடிய படித்துவிட்டு
மறுநாள் தேர்வுக்குப் பிறகு
விடிய விடிய
தூங்கிய நினைவுகள்
இன்னும் எனக்குள் தூங்கவில்லை
வைரமுத்துவையும் கவிக்கோவையும்
வாசிக்கவும் சுவைக்கவும்
கற்றுக் கொடுத்த் நூலகம்
மன ஏடுகளை
கவிதையாய் கீறல் போட்டது
மலையாய் நிற்கிறது
நட்புக்கும் காதலுக்கும்
புதிர் போட்டு
அடுக்கடுக்காய்
விடுகதைகளைப் போட்ட
வேள்வி உறவுகள்
நினைத்தவுடன் சுடுகிறது
அழகுக்கு
தாடி வளர்த்ததும்
அழகியால்
தாடி வளர்த்ததும்
மறப்பதாயில்லை
கல்விப் பயணத்தின்
ஓர் இறுதி நாளில்
பட்டமளிப்பு விழாவில்
நடுங்கிய கரங்களோடு
மாமன்னரிடம்
பதற்றத்தோடு பட்டம் வாங்கியது
மிச்ச நினைவுகளாய்
ஒட்டிக் கொண்டிருக்கிறது
அன்றிரவு இறுதியாய்
ஓர் உணவு விடுதியில்
பிரியாவிடை
பழைய முகங்களையும்
புதிய முகங்களையும்
பிணைத்துப் போட்டது
அன்றிரவு
மௌனம்தான் அதிகமாய் பேசியது
இனம்புரியாத சோர்வலைகள்
முகச்சுருக்கங்களில்
வேதனை வடுக்கள்
நடுசாமம்வரை
நகராமலேயே
நகங்களை முறித்துக்கொண்ட
விரல்களின் வேதனை
பழைய முகங்களின்
அனுபவப் பல்லவிகள்
புதிய முகங்களுக்கு வேடிக்கையாய்
ஒவ்வொருவராய்
அலசிக்கொண்டிருந்தார்கள்
பழைய கந்தல்களைப் புதுமையாய்
நிலவை சாட்சி வைத்து
ஒரு கிளைவிடும் சாலையில்
மீண்டும் கைகளைக் குலுக்கிக்கொண்டோம்
விழிமடல்கள் வருடிய வண்ணம்
கண்ணீர் அருவியாய்
தேம்பியும் கதறியும்
வாய்விட்டு அழுது
கட்டிப் புரண்டோம்
இதுவரை
யோசித்துப்பார்க்காத பிரிவு
வேதனை விழுதுகளாய்
அன்றைய இரவெல்லாம்
உறக்கத்தை இழந்து
நண்பர்களில்லா வெளி உலகத்தை
அசைப்போட்டு
அசந்துபோனது
இரண்டு யுகங்கள்
எப்படியோ கடந்துவிட்டன
மனப்பெட்டகத்தில்
ஒரு மூலையில்
எண்ணங்கள்
மூச்சுக் காற்றாய்
ஒட்டிக்கொண்டிருக்கின்றன
அவ்வப்போது
வந்துபோகும் அறிவுப்புகளாய்
எப்பொழுதாவது மழையில்
மண் பூசிக்கொள்ளும்
மண்வாசனயாய்
எட்டிப்பார்க்கும் பழைய நினைவுகள்
மனம் எடை பார்க்கிறது
பொய்யில்லை
அவை முப்பொழுதுமே
நெஞ்சில் இனிக்கும் நினைவுகள்.
அடையாளம் தெரியாத நான்
ReplyDeleteபல வேளைகளில்
எனக்கு நானே கேட்டுக் கொண்டும்
அலசல்களில் தேடிப்பார்த்தும்
இன்னும் விடுவிக்கமுடியாத புதிராய்
நான் காற்றா?
வெளியில் உலாவுவதைப்போல்
எனக்குள்ளும் தடையே இல்லாமல்
சுதந்திரமாய் வந்து போகிறது
புதிர் அவிழ்வதாய் இல்லை
எனக்கு உருவம் இருக்கிறதே!
நான் என்ன நீரா?
உறிஞ்சியும் பருகியும்
அருந்துபோகா அருவியாய்
மூலமும் கழிவும் மாறி மாறி
முழுவதும் குளுமையாய்
இன்னும் விளங்கவில்லை
எனக்கு வடிவம் இருக்கிறதே!
நானும் நெருப்பா?
தேகம் சுடுகிறது
வெப்பமாணி அளவையை
வாசித்துக் காட்டுகிறது
கட்டை விரல் தொட்டு
உச்சந்தலைவரை நெருப்பின் அனல்
விளங்காத புதிராய்
என்னுள் புகை இல்லையே
நான் என்ன
மண்ணா? ஆகாயமா?
தடயங்கள் தெரிகிறதே
ஆதாரத்தைத் தேடுகிறேன்
எல்லாமே மங்களாய்
தெரிந்துகொள்ள முடியாத
புதிராய் நானும்
கொஞ்சம் வெளிச்சமானது
பஞ்சபூதங்கள்
உலகைச் சுற்றி பரந்து கிடக்கிறது
எனக்குள்
உறைந்து கிடக்கிறது.
தடுமாறிய கால்கள்
ReplyDeleteகிளைவிடும் சாலையின்
முச்சந்தியில்
மூச்சிறைக்க தடுமாறிய கால்கள்
நிலைகுத்தின
பார்வையை அள்ளி வீசி
நாலாப்பக்கமும் வெறிக்கிறேன்
பனி மூட்டத்தில்
மூழ்கிய சாலைகள்
மெல்லிய கீறலாய்ப்
பார்வைப் படலத்தில்
குழப்பத்தில் மனம்
இலக்கு மறதிப் பெட்டகத்தில்
ஆழ்ந்து உறங்கிக் கொண்டிருந்தது
கால்கள் துடித்தன
ஒரு நீண்ட பயணம்
மிச்சமிருக்கிறது
இந்தப் பொழுதுக்குள்
பிள்ளையார் சுழி போட்டாக வேண்டும்
மனம் இன்னும்
அலட்சியமாய் சிரித்தது
நடந்து போகிறவர்களெல்லாம்
என்னைக் கடந்த வண்ணமாய்
வறட்டுப் பார்வைகள்
விலகட்டும் பனிமூட்டங்கள் என்று
மனம் அடிக்கடி
ஆறுதல் சொல்லிக் கொண்டிருந்தது
வீதி வெளிச்சமானபோது
யாருமே இல்லை
எல்லோருமே போய் விட்டிருந்தார்கள்
நான் மட்டும் தனிமையில்
தடுமாறிய கால்களோடு
என்னை எத்தணித்துக் கொண்டு
கால்களுக்கு முதலடியைக்
கற்றுக் கொடுத்தபோது
கோடைப் புழுதியில்
மீண்டும் பாதைகள் மங்களாய்
இப்பொழுது
மனம் பேசியது
அடுத்தப் பயணம் எப்போது?
உயிர்த்தெழுந்த காதல்
ReplyDeleteமனமுகடுகளில்
அவள் நினைவுகள்
நகரும் மேகங்களாய்
உள்ளுக்குள் உரசிக் கொண்டிருந்தது
கால் நூற்றாண்டாய்
மன இடுக்குகளில்
பத்திரமாய்ப் புதைத்துவைத்த
விதைகள்
இன்று விருட்சமாய்
அலையாத விருந்தினராய்
எனது தனிமையின் அந்தரங்கத்தைப்
பங்குப்போட்டுக் கொண்டது
வசந்த காலத்தில்
பூமியின் வாசல்களில்
அள்ளித் தெளித்த கோலமாய்
ஈரக் காற்று
ஞாபக சுவாசங்களை
நிரப்பிக் கொண்டிருந்தது
சொட்டுச் சொட்டாய்
அவள் நினைவுகள்
மறதிப் போர்க்களத்தில்
அவளை என்றோ சாய்த்துவிட்ட
ஆணவத்தில்
ஆடிக்கொண்டிருந்த மனசு
வெட்கித் தலை குனிந்தது
அவள் மீண்டும்
எனக்குள் உயிர்த்தெழுகிறாள்
ஒரு பருவ வாசலில்
இனம்புரியாத உணர்வுகளுக்கு
உரையெழுதியவளாய் அவள்
முப்பத்தாறு மாதங்கள்
இலையுதிர் காலமாய்
மன நாட்காட்டியின் ஏடுகள்
உதிர்த்த வண்ணமாய்
எப்படி எங்களுக்குள்
ஒரு மனமுடிச்சு விழுந்தது
தேடல்களில் புதைந்து போனேன்
எனக்குள் இன்னும் வெளிச்சமாகாத
கேள்வியாய் புதிராய்
அந்த
நம்பக நாட்களில்
எவ்வளவோ
பகிர்ந்து கொண்டோம்
ஆயிரமாயிரம் மணித்துளிகளை
சில்லறைகளாய்ச்
செலவு செய்தோம்
கணக்கில் வரவு இல்லாமல்
செலவு மட்டும்
பட்டியலில் நீண்டுக் கொண்டிருந்தது
கல்லூரிப் பருவத்தின்
ஓர் இறுதி நாளின்
இரவில்
பிரிவைச் சோகமாய்ப்
பகிர்ந்து கொண்டோம்
ஏழை நிலவொன்றை
சாட்சி வைத்து
அவள் கயல்விழிகளில்
கண்ணீர் அருவியாய்
என் மடியினில்
முகம் புதைத்து
மெல்லியக் கதறலாய்
தேம்பல்
விட்டும் விடாத தூறலாய்
கண்ணீர்
விடியும்வரை
ஊமை நாடகத்திற்கு
வசனம் எழுதிக் கொண்டிருந்தோம்
விடிந்ததும்
பிரிய முடியாமல்
காதலுக்கு
உயில் எழுதிவைத்து
நம்பிக்கையோடு விடைசொன்னோம்
கால் நூற்றாண்டு
கடந்து போயிருந்தது
நாங்கள்
எங்களை மறந்துபோயிருந்தோம்
வெவ்வேறு உலகங்களில்
அவளைப் பற்றிய தகவல்கள்
ஒன்றுமேயில்லை
இரவின் தனிமையில் நகர்ந்தவாறு
வானத்தை ஊடுருவினேன்
அதே நிலவு
என்னைக் கண்டதும்
ஓடி ஒளிந்து கொண்டது
மேக மூட்டங்களின் குவியலில்.
காவிய நாயகி
ReplyDeleteகடை கடையாய்
ஏறி இறங்கி
தேடிப் பிடித்து
வாங்கி வந்திருந்தேன்
கையில் சிலப்பதிகாரம்
தமிழனின் மாண்பும் பண்பும்
அடுக்கடுக்காய் நேர்த்தியாய்
சாய்வு நாற்காலியில்
சாய்ந்தவாறு
பக்கங்களை
நகர்த்திக் கொண்டிருந்தேன்
கொலைக்களைக் காதை
கோவலன் அறுபட்டது
பதற்றத்தில் மனம்
ஒரு கணம்
அறுந்துபோனது
கொலைவெறியோடு கண்ணகி
எல்லாவற்றையும்
முடித்துக் கொண்டு
கணவனின் களங்கம் துடைத்து
கலங்கிய கண்களோடு
சோகம் என் விழிகளைத் தாலாட்ட
என்னை மறந்த நிலையில்
ஆழ்ந்திருந்தேன்
மெல்லியதாய் புகை மூட்டம்
தலைவிரிகோலமாய் கண்ணகி
கையில் ஒற்றைக் கால் சிலம்பு
களியாட்டம் ஆடுபவளாய்
வாய்விட்டுச் சிரித்தாள்
பதறிப்போனேன் !
அகோரமும்
கண்ணில் தெறித்த
கொலைவெறியும்
களியாட்டமும் கண்டு
எனக்குள் உயிர்
உறைந்துபோனது
பயமும் நடுக்கமும்
எனக்குள் வேலி போட்டு
வேடிக்கைக் காட்டியது
இரக்கமாய்க் கேட்டேன்
“யார் நீ?”
“கண்ணகி என்பார்”
எனக்குள்
கொஞ்சம் தைரியம் வந்தது
இம்முறை
அவளுக்கு ஒரு வழக்குறைகாதையை
எழுதத் துணிந்தேன்
“தீர்ந்ததா உன் கோபம்,
அடங்கியதா உன் கொலை வெறி”
கேள்விக் கணைகளில்
துவண்டு போனாள்
பதிலில்லை
குற்றவாளிக் கூண்டில் அவள்
என் நீதிமன்றம்
நான் மட்டும் நீதிபதியாய்
கொஞ்சமும் குற்றவுணர்வின்றி
என்னை வெறித்தாள்
அவளது கோபம் நியாயமானது!
“உன் கணவனின் சாவுக்கு
காரணம் யார்?”
“பாண்டியன்”
சுருக்கமாய் சுடுவதாய்ப் பதில்
“அவனுக்கு என் நீதிமன்றத்தில்
தூக்கு”
அதற்குள்
நீயே முந்திக் கொண்டாயே?
அவன் மனைவியும் சேர்த்து”
வியப்போடு நின்றாள்
அடுத்த கேள்வியை வைத்தேன்
“இன்னும் யாரைக் குற்றம் சாட்டுகிறாய்?”
“பொய்யுரைத்த பொற்கொல்லன்”
குமுறும் எரிமலையாய் அவள்
“அவனை ஏன் விட்டு வைத்தாய்?”
“விதி அவனைப் பதம் பார்த்தது”!
மௌனமாய் நின்றாள்
“மன்னனும் பொற்கொல்லனும்
குற்றவாளிகள் என்றால்,
மதுரையை ஏன் எரித்தாய்?”
அவளிடமிருந்து
பதிலுக்கு ஆவலாய் நான்.
இப்பொழுது
மௌனம் தலைவிறிகோலமாய்
“எவ்வளவு நாசம் செய்தாய்?
ஒரு பாவமும் செய்யாத மக்கள்
வீடு வாசலை இழந்து
நடுத்தெருவில்
நீ கொக்கரிக்கிறாய்!”
குற்றவுணர்வில்
மௌனம் காத்தாள்
“பொது உடைமைகளை
அழித்துத் தொலைத்தாய்?
யார் அப்பன் வீட்டு காசு?”
கேள்விக் கணைகளைத் தொடுத்தேன்
தகர்ந்து போனாள்
“நீ குற்றவாளி
என் நீதிமன்றம்
உன்னைக் குற்றம் சாட்டுகிறது”
வாயடைத்து நின்றாள்
“உன்னைத் தூக்கிலிட
உத்தரவிடுகின்றேன்” என்றேன்
பலத்த ஓசையோடு
சிரிக்கத் தொடங்கினாள்
சிரித்துக் கொண்டே நின்றாள்
இடைவிடாது நீண்ட நேரமாய்
எல்லாமே இடிந்து விழுவது போல
மெல்ல மெல்ல
தேயத் தொடங்கியது
அந்தச் சிரிப்பொலி
மீண்டும் மெல்லியதாய்
இளையோடியது
ஒரு பனிமூட்டம்
அவள் உருவம்
கொஞ்சம் கொஞ்சமாய் அருவமானது
திடுக்கிட்டு விழித்தேன்
என் எதிரில் கண்ணகி இல்லை
அவளது ஒற்றைக் காற்சிலம்பு
இப்பொழுது என் கையில்.
ஆன்மீக வியாபாரிகள்
ReplyDeleteஇடிந்து விழும்
சுவரொட்டிகள்
பத்திரிக்கைகளில்
பக்கம் பக்கமாய்
விளம்பரங்கள்
மூலை முடுக்கெல்லாம்
குவிந்து கிடக்கும்
துண்டு அறிக்கைகள்
வானொலி அலைவரிசைகளை
அக்கிரமித்துக் கொண்டு
நொடிக்கு ஒரு
பேருரை
பெரிய மண்டபங்களில்
வண்ண வண்ண விளக்குகளில்
சுவடிப்பு
காற்று மண்டலத்தைக் கிழிக்கும்
ஒலிபெருக்கிகள்
குறுக்கு வழியைக்
கண்முன்னே நிறுத்துகிறார்கள்
சரியை,கிரியை, யோகம் எதற்கு
நேராக சில மணித்துளிகளில்
ஞானம்
அருட்பெருஞ்சோதி
வள்ளலாரும்
திருமந்திர மூர்த்தியும்
கலங்கிப் போய்விடுவார்கள்
நிரம்பி வழியும்
மண்டபத்திற்குள்
கண்களை மூடியவாறு
ஆயிரக்கணக்கான பக்தர்கள்
கத்தை கத்தையாக
நோட்டுகளை எண்ணியவாறு
குரு
குளிர்பதன அறையில்.
ஞானத் தேடல்
ReplyDeleteஒரு நாள்
எனக்குள் ஒரு ஞானோதயம்
நானும் புத்தனாய்
ஆனால் போதிமரமில்லை
நானே வியந்துபோனேன்
எப்படி இப்படி?
புத்தகக் குவியலுக்குள்
முகம் புதைத்துக் கொண்டு
கொஞ்ச காலமாய்
என்னைத் தொலைத்துக் கொண்டேன்
என் வேள்விகளுக்குப்
பொருட்கள் கிட்டாததால்
புத்தகங்களை வெறுத்து
இருள் சூழ்வதற்குள்
வெளிநடப்புச் செய்தேன்
அனுபவங்களை உள்வாங்கிக் கொண்டு
சேகரிக்கலாமென்று
தட்டுப்பட்டவர்களையும்
ஞாபகப் பெட்டகத்திற்குள்
நுழைந்து வலம் வந்தவர்களையும்
தேடிப் பிடித்தேன்
ஏதோ ஆறுதலுக்குக்
கொஞ்சமாய்க் கொட்டி முடித்தார்கள்
சூன்யமாய் எனக்குள்
இன்னும் திருப்தியில்லை
மீண்டும் மீண்டும்
அதே கேள்விகள்
முட்களாய்ப் பதம் பார்த்தன
நான் உண்மையில் எது?
எங்கிருந்து வந்தது?
எங்கே போகப் போகிறது?
இதற்கு ஜனனமும் மரணமும்
யாருடைய முன்மொழிவு?
வேறு வழியில்லாமல்
கடவுளுக்கு ஒரு கடிதம் போடலாமென்று
கசங்கிய காகிதமொன்றை
மெதுவாய் நிமிர்த்தி
முகவரியினை எழுதத் தொடங்கினேன்
அப்பொழுது
யாரோ அறிமுகமில்லாதவன் ஒருவன்
என் தோள்களை
உலுக்குவதைக் கண்டு
மிரண்டு திரும்பினேன்
என் அனுமதிக்குக்
காத்திராமலேயே
என் கரங்களைப் பற்றி இழுத்தவாறு
ஓர் இருட்டுக்குள் நுழைந்தான்
எல்லாமே இருட்டாய்...
விழலுக்கு...
ReplyDeleteஒவ்வொரு இரவும்
எங்களுக்கு வாடிக்கையானது
காப்பிக் கடைகளில்
எங்கள் அவசரக் கூட்டங்கள்
எண்ணற்ற கருப்பொருள்களில்
நாங்களே உருமாறியிருந்தோம்
சமுதாயத்தின் அவலங்களையும்
இயலாமையையும்
மூட்டை மூட்டையாய்
அவிழ்த்துப் பார்ப்போம்
எங்கள் கழுகுப் பார்வையில்
எதுவுமே தப்பியதில்லை
பக்கத்து வீட்டுக்காரனின் சிக்கல் முதல்
பாராளுமன்ற சிக்கல்வரை
எல்லாமே விரல் நுனியில்
மணிக்கணக்காய் அலசுவோம்
வேர் முதல் நுனி வரை
சொற்போரும் பட்டிமன்றமும்
எங்கள் வாதத் திறமையைக் கண்டு
வாயடைத்து நிற்கும்
எங்கள் வட்டத்தைச் சுற்றி
ஒரு பெரிய வட்டம்
ஆவலோடும் வியப்போடும்
அவ்வப்போது வெளியிலிருந்தும்
ஆதரவுக் குரல் வந்துசேரும்
ஒவ்வொரு நாளும்
நடுசாமம் வரை
வழக்காடு மன்றம் நீளும்
நாங்கள் சலைத்தவர்களல்ல
விட்டுக் கொடுப்பதற்கு
மூச்சின் இறுதிச் சொட்டுவரை
ஏவுகணைகளாய்
வாதத் தொகுப்புகளை
பாய்ச்சிக் கொண்டே இருப்போம்
கடையடைப்பு செய்யும்போது
வேண்டா வெறுப்போடு
எழுந்து சோம்பல் முறித்து
பழைய மோட்டார்சைக்கிள்களை
எரிச்சலோடு முடுக்குவோம்
நம்பிக்கையிருக்கிறது
நாளை மாலையும்
இந்தச் சபை மீண்டும் கூடும்
தீர்க்கப்படாத வழக்குகள்
இன்னும் குவிந்து கிடக்கின்றன கிடப்பில்.
அடுத்தவனைப் பார்த்தாவது...
ReplyDeleteஅவனும்
வந்தவர்களின் பட்டியலில்
வந்தேறிகள் என்ற வரலாற்று முகத்தோடு
எல்லாவற்றையும் மறந்தவனாய்
சேமிப்புப் பெட்டகத்தில்
கத்தைக் கத்தையாக
சேமித்தவற்றையெல்லாம் எண்ணியவாறு
இயலாமை போர்க்களத்தில்
அவன் புளுதித் தட்டி
நெடுநாட்களாகி விட்டது
இப்பொழுதெல்லாம்
சிகரங்களின் கலசங்களுக்கு
முலாம் பூசிக்கொண்டிருக்கின்றான்
இன்றைய நாட்கள்
அவனுக்குள் கனவுப் பதிவுகளைக்
காட்டுவதில்லை
அடுத்தத் தலைமுறையின்
வரலாற்றுக் குறிப்புகளை
பதியம் செய்தவாறே
புயலாய் நகர்ந்து கொண்டிருக்கிறான்
அவனது சொத்துடைமை
வரவுக் கணக்கின் பைகளில்
நிரம்பி வழிந்தவாறு
விதியைக் குற்றவாளிக் கூண்டில் நிறுத்தி
அவன் குறுக்கு விசாரணைகளை
நிகழ்த்துவது கிடையாது
நிரந்திர சாட்சியாய் மதிமட்டுமே
அவன் பள்ளிகளும்
வாணிப மையங்களும்
குடியிருக்கும் வீடுகளும்
வானாந்திர கட்டடங்களாக
அது வேற்றுமைகளை
அடையாளம் காணாத
ஓர் உலகம்
அங்கு உழைப்பு மட்டுமே
முன்மொழியப்பட்டு
ஏகமனதாய்த் தேர்வு செய்யப்பட்டு
கரங்களெல்லாம் தானம் செய்யப்பட்டு
நகர்ந்து கொண்டிருக்கும் பூமி
நின்று மூச்சி விடுவதற்கு நேரமில்லை
மணிக்கணக்காய் வாய்கிழிய பேசுவதற்கு
இடமில்லை
அவசர அவசரமாய்ப்
போய்க் கொண்டிருக்கிறார்கள்
பொழுது சாய்ந்த பிறகும்
இருட்டைக் கிழிக்கும்
விளக்குகளின் வெளிச்சத்திலும்
இன்னும் தேடிக்கொண்டிருக்கிறார்கள்
நாளைய நாட்கள்
அவர்களுக்கு நம்பகமாய்
நாமும் அதே வரலாற்று முகத்தோடு
எங்கே போகிறோம்
அவனைப் பார்த்தாவது.....
புத்தகங்களும் பேசும்
ReplyDeleteமனம் விட்டுப் பேசுவதற்கு
ஆள் இல்லையேயென்று
பொருமிக் கொண்டிருக்காதே
புத்தகங்களும் பேசும்
கொஞ்சம் மனம் விட்டுப் பேசிப்பார்
உனது தனிமை தாகத்திற்கு
தொண்டைக் குழாய்களை
ஈரமாக்கும் பானமாய்
மழுங்கிய உனது அறிவு வாளைச்
சாணைப் பிடித்து
கூர்மையாக்கும்
களங்கள் உன்னைக் கண்டு
வெறிக்கும்
உன்னைச் சூழ்ந்து
சுட்டெரிக்கும்
கவலை யூகத்தைத்
தகர்த்தெறியும்
பொழுதெல்லாம்
பேசிக் கொண்டிரு புத்தகங்களோடு
உன்னைச் சுற்றி தெரியும்
ஒளிவட்டத்தில்
பூக்கள் மலரும்
அறிவு உலகம்
சிவப்புக் கம்பளம் விரித்து
உன்னை வரவேற்கும்
உனது உலகத்தில்
எல்லாமே வெளிச்சமாய்
இருள் மருண்டுபோயிருக்கும்
பழுதுபடாத உனது அடிகளின்
பவ்வியமான பயணத்தில்
பாதாளங்கள்கூட திறக்கும்
உனது அறிவு மழையில்
நனைவதற்கு
உலகமே அணிவகுத்து நிற்கும்
உனது அறிவுப் பெட்டகம்
காலியாகி நெடுங்காலமாகிவிட்டது
வெறுமையான உன்னிடம்
கொடுப்பதற்கு ஒன்றுமேயில்லை
கேட்பதற்கும் நாதியில்லை
உனது முகமும் ஒளியிழந்து
அமாவாசை இருளாய்
ஒவ்வொருவராய் மிரட்டிப்பார்க்கிறது
காலச் சக்கரம்
அசுர வேகத்தில் சுழன்றவாறு
நெருங்கிவரும் முதுமை
மீந்திருக்கும்
சொற்ப நாட்களாவது
வாழ்ந்த பயன் சொல்லட்டும்
பேசு
உன் தனிமைகளின்
மணிச்சொட்டுகளில்
புத்தகங்களோடு பேசு.
நானும் என் கனவுகளும்
ReplyDeleteஅரை நூற்றாண்டைத்
தொட்டுப் பார்க்கும் வயது
அனுபவம்
வயதை முந்திக் கொண்டு
ஒரு அசுர பிரயாணம்
வார்த்தைகளால்
சொல்லி முடிக்காத
வேதனை வரிகள்
மனமுகடுகளை உரசியவாறு
கற்களும் முட்களுமாய்
அலங்கரிக்கப்பட்ட பாதைகள்
பாதங்களைப் பதம் பார்த்து
சூடுபோட்ட அனுபவங்கள்
ஒன்று
எனக்குள் எழுந்த
பிரளயம்
இன்னொன்று
வழிப்போக்கனாய்
இந்த சமுதாய தெருக்களில்
உலா வந்தபோது
என்னைப் பிண்ணிய
வளையம்
இளைப்பாறும்
ஒரு முச்சந்தியில்
எல்லாவற்றையும்
முடிச்சவிழ்த்துக் கொட்டுகிறேன்
அலசல்களில்
சில தேடல்களில்
நெருடல்களில்
தீக்குச்சியாய் உரசிப் பார்க்கும்
எண்ண அலைகள்
மனத்திரையில்
நூலாம்படையாய்
ஒட்டிக் கொண்டு
பசபசக்கும் உணர்வுகள்
பகிர்வுகளுக்காக
எழுதலாமென்று
என் தூவலைத் தூக்கி
நிறுத்துகிறேன்
அது ஒரு நீண்ட
பிரயாணம்
மாறுபட்ட பரிணாமம்
மனம்
எழுத்துக் கூட்டி
வாசித்துக் கொண்டிருப்பதை
தூவல்
மொழிப்பெயர்க்கிறது
தோழர்களே வாருங்கள்
அடுத்த தேசத்தை நோக்கி
நமது பயணம்
விரியட்டும்
தோள்களைக் கடுக்கும்
எனது
சுமை முடிச்சுகளை
நீங்கள் அவிழ்க்கும்போது
நாம்
ஒன்றாகிப் போயிருக்கலாம்
உணர்வுக் குட்டைகளில்
ஒன்றாக ஊறிய மட்டைகள்தானே
நாம்.
888 Casino & Hotel - Dr. Maryland
ReplyDelete2018 · The brand-new 888 Casino & 당진 출장안마 Hotel 용인 출장샵 at Mount 남원 출장샵 Airy offers a new adventure when you 하남 출장안마 take a spin 안성 출장마사지 at the casino. The slot machine features five reels