Thursday, 24 March 2011

நானும் சமகாலமும்

வாழ்க்கை

ஒரு
அமுத சுரபி
என் கைகளில்

நாடோறும்
நிறைவாகவே சுரக்கிறது

ஒவ்வொரு
பொழுதும்
குறைவில்லாமல்
வழிகிறது

இன்பமும்
துன்பமும்
******************
மானுடம்

கோடரியின்
அசுரக் கரங்கள்

பதறாமல்
மரம்
மௌனமாய்ப் பேசியது

காது மடல்களை
உரசிய இரகசியம்

"மனிதா
உன்னை நேசிக்கின்றேன்"
*******************
விடைபெறுதல்

விடிவெள்ளி
அடிவானில்

நிலவு
காத்திருந்தது
கதிரவனின்
வரவிற்கு

நன்றி
சொல்லி
விடைபெறுவதற்கு.
****************
வாழ்க்கை

விடியல்
ஒரு கனவு

நாம்
உணர்வுகளோடு
ஒன்றிப்போனோம்

பலிக்கும்
என்றார்கள்
விடியல் கனவு

விழித்துப்
பார்த்தேன்

நாம் இன்னும்
அந்நியர்களாய்
பல நிறங்களில்...
***************
கடந்தவை

சன்னலோரம்
ஒரு சாயுங்காலம்
வெறித்திருந்தேன்

வழிப்போக்கனாய்
கடந்துபோன
அனுபவங்கள்

ஒரு கணம்
நின்றது
வேடிக்கையாய்ச்
சிரித்தது

கடந்துபோனது
சில மணித்துளிகளில்...
************************
ஆசை முகம்

கால்கள்
நிலைக்குத்தின
குளக்கரையோரம்

நிலவின்
பிம்பம்
கண்ணாடியாய்

தீண்டும்
தென்றலின்
மெல்லலைகள்

அலைக்கழிக்கிறது
அவளது
ஆசை முகம்.
********************
நிழல்

நான் யார்?

என்னுள்
வேள்வியாய்
வினாக்களின்
படையெடுப்பு

நிழல்
அமைதியாய்ச்
சிரித்தது.
*****************
விபத்து

நமது
சந்திப்பு
ஒரு விபத்து

எதார்த்தமாய்
நீ
அள்ளி வீசிய
புன்னகை

முகமனுக்காக
உதிர்ந்த
ஓரிரு சொற்கள்

இன்னும்
காத்திருக்கிறேன்

காயப்பட்ட
இதயத்தோடு...

******************
ஞான ஒளி

இருள்
தவம் களையும்போது

ஒளி
மௌனமாய்
நுழைகிறது

சில
உண்மைகளைத்
தோளோடு
சுமந்து கொண்டு.

No comments:

Post a Comment