Monday, 7 July 2014


உன் ஞாபக மழையில்

புதுக்கவிதை தொடர்

கோவி.மணிமாறன், நீலாய்

 

rainy-scenery-with-umbrella-thumb18667462.

 

உன் ஞாபக மழையில்

 

       எனக்குள் இளையோடிய பயவுணர்வுகள். இறை அச்சத்தை உள்வாங்கிய ஒரு பக்தனாய். வினைப் பயனை மன நிறுவையில் அளந்து பார்க்கிறேன். பாவம், புண்ணியம், ஊழ்வினை என்றெல்லாம் உள்ளுக்குள் ஒலிக்கும் மந்திர மொழிகள். விடை பரம்பொருளின் திருவடிகளில். ஆனால் மனம் ஒரு பரம்பொருளை ஏற்காது இன்னும் மாயையில் உழன்றுகொண்டிருக்கிறது. ஆலய வளாகத்திற்குள் நுழைந்தவுடன் எல்லாவற்றையும் வணங்குகிறது. சுற்றிவந்து நவக்கிரகங்களின் பக்கத்தில்; தடுமாற்றாம் வலம் வரலாமா வேண்டாமா? இமைகளை மூடியவாறு வலம்வரும் பகதர்களைப் பார்த்தவாறு. சம்பந்தர் மனக்கண்ணில். நாளும், கோளும், நட்சத்திரமும் அடியார்களுக்குத் தொல்லையில்லை பரம்பொருளின் திருவடிகளைச் சார்ந்தவர்களுக்கு. அவை அஃறிணை. இறைவனின் படைப்பு. இறைவன் உயர்திணை. யாருடைய படைப்பு? அவனை வணங்குவதா? அவன் படைத்ததை வணங்குவதா? அவனை வணங்கினால் வினைபயன் நீங்கி வீடுபேறு.. சஞ்சலக்கும் மனம். விழித்துக் கொண்ட பக்தனாய் நான் உன் ஞாபக மழையில் நனைந்தவாறு நவகோள்களுக்கு அப்பால் நீ.

https://encrypted-tbn3.gstatic.com/images?q=tbn:ANd9GcSHuL4ZgQAnCoyIlDcNim-w3lQ-N_ykzLZWVZYLMErKskBRrbrr

 

 

31.  ஏமாளி பக்தன்.

 

              உன்னைப்

              பார்க்கும் பொழுதெல்லாம்

              எனக்குள் பயம்

              நவகோள்களைச் சுற்றும்

              ஏமாளி பக்தனாய்

              நானும்

              ஆகிவிடக்கூடாதென்று.

 

உன் ஞாபக மழையில் 32.

 

உன் மொழி எனக்குப் பிடித்திருக்கிறது. சொற்களின் அளவை பாராட்டுக்குறியது. தேன் சிந்தும் இதழ்களை உரசிக்கொண்டு வாய்வழியே எட்டிப்பார்க்கும் அந்தச் சுகந்தமான சொற்கள் என் காது மடல்களில் தேன்மழையாய். இனிமைக்கு அடுத்ததாய் கனிவு பின் பணிவு என்றெல்லாம் உன் மொழி இலக்கணம் பேசுகிறது. பாரதியை நினைத்துப் பார்க்கிறேன் ஏதோ ஒரு கிரங்களில் அவன் பாடியது   “ இன்பத் தேன்வந்து பாயுது காதினிலே” எனக்கும் பொருந்துகிறது. அதற்கும் மேலாக வியக்கவைக்கும் உன் குரல். பேசுவதும் பாடுவதைப் போலவே தெரிகிறது. எனக்குள் உறக்கம் வெளிநடப்பு செய்கின்ற நாட்களில் உன் ஞாபக மழையில் நனைந்தவாறு மனக்குகைகளில் உன் குரலின் அசரீரி; மலர்படுக்கையில் மெய்மறந்த தூக்கம்.

 

 

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcQzalylBjusQ42i1d3m58-ZP8XIEDIrrHuRaSTLDenBz2goM5r7KQ

 

32. பேசு

 

       கண்ணே

பேசு

சில மணித்துளிகளாவது

மனம்விட்டு

பேசு

கொஞ்ச நேரம்

நான்

தூங்க வேண்டும்

தவிக்கும்

என் விழிகள்.

 

உன் ஞாபக மழையில் 33.

 

 

திரையரங்குகளில் சினிமா. பொழுதுபோக வேண்டும். உன்னுடன் கொஞ்ச நேர பகிர்வு அவசியம். திரையரங்குகளின் வாசலில் எனது கால்கள் கையில் நுழைவுச் சீட்டு. வருவாயா? வரமாட்டாயா? என்று மிரட்டும் வானம் நீரைக் குடம் குடமாய்க் கொட்டியவாறு. நீ குடையோடு வந்தாய். அவசரமாய் நாம் அரங்கிற்குள் ஆரவாரமே இல்லாத இருக்கைகளில் நாம் தனிமையில். திரையில் ஒளி விழுந்தது. நகரும் எழுத்துகள். எட்டிப்பார்க்கும் முகங்கள். பாடல் காட்சி மழையில் நனைந்தவாறு வெள்ளை தேவதாய் நாயகி. மனம் குத்துக்கல்லாய் நகராமல். உன் ஞாபக மழையில் நனைந்தவாறு எனக்குள் நீ நாயகியாய் மூடிய என் விழிகள்.

 

 

 

https://encrypted-tbn2.gstatic.com/images?q=tbn:ANd9GcSpWsE53He6Zqf1Lq7nwWDxHSCefqLB8IAhg4N9bmVLuMLlkWRo

 

33. நாயகி.

 

       திரை அரங்கிற்குள்

       நுழைந்தோம்

       விழிகள்

       திரைகளில்

       மனக்காமிரா மட்டும்

       நகராமல்

       நீ

       நாயகியாய்

       என் பக்கத்தில்

 

 

 

 

 

 

உன் ஞாபக மழையில் 34

 

வாழ்க்கையில் எல்லாமே புதிராய். உடல், உயிர், நீ, நான் எல்லாமே புதிர்தான். பஞ்சபூதங்களும் புதிர்தான். எதற்கும் விடைகாண இயலாது துறவு பூண்ட மனம். உன் வருகை எனது பழைய புதிர்களையெல்லாம் ஒரு பொழுதிற்குள் மறைத்துவிட்டது. இப்பொழுது எனக்கு அதைப் பற்றிய சந்தேகம் இம்மியளவும் இல்லை. ஒன்று மட்டும்தான் எனக்குள் இன்னும் புரியா புதிராய். என்னுள் நீண்டு வளரும் உன் நினைவுகள். புன்னகைப் பூக்களை காற்றில் வீசியவாறு என்னைக் கடந்து செல்கிறாய், ஆனால் ஊமையாகிவிடுகிறாய். ஒருமுறையாவது ஒரு சொல்லையாவது உதிர்வாயா என்று தவித்திருக்கும் மனம் இருந்தும் சந்திக்கும் சந்தர்ப்பங்களில்கூட நாணத்தோடு நகர்ந்து விடுகிறாய். அடிக்கடி பார்க்கிறாய்; சிரிக்கிறாய்;என் முன்னே நடமாடிக் கொண்டிருக்கிறாய்; ஏன் இன்னும் மௌன விரதம். முரண்களாலான புதுக்கவிதையாய் நீ; படித்துப் படித்துப் பார்க்கிறேன் இன்னும் புரியாத புதிராய் உன் ஞாபக மழையில் நனைந்தவாறு நான்.

 

 

 


 

 

 

34. புதிர்

 

   எழுதிய

   புதுக் கவிதை

   வாசித்துப்பார்க்கிறேன்

   பலமுறை

   இன்னும் புரியவில்லை

   புதிராய்

   நீ.

 

 

 

 

 

 

 

 

உன் ஞாபக மழையில் 35.

 

மனம் உன் வயப்பட்ட நாள் முதலாய் என்னுள் கனவுகளின் படையெடுப்பு. கற்பனை ஏவுகனைகளின் தாக்குதல்களில் மனம் தள்ளாடிப் போகிறது. இதுவரை நான் நினைத்துப் பார்த்ததில்லை; என் கனவுகளும் கற்பனைகளும் மிக அழகானவை என்று. உன்னைப் பார்த்தப் பிறகுதான் வானவில்லின் எழு வண்ணங்களும் எனக்கு அடையாளம் தெரிந்தது. அடிக்கடி ஆடை மாற்றிக்கொண்டு செவ்வானமுமாய், மஞ்சள் வானமுமாய் வந்து நிற்கும் வானம் கண்ணுக்குத் தெளிவாகிறது. நிகழ்ச்சிகளுக்கெல்லாம் தனியாய்ப் போய் வருகிறேன் உன் நினைவுகளை துணைக்கு அழைத்துக் கொண்டு. பிறந்தநாள் விழாவில் உன் பிறந்தநாள் ஞாபகங்களில் மெலுகுவர்த்திகளை ஏற்றுகின்றது. மன்றல் அழைப்பினைக் கையில் ஏந்தியவாறு, ஒவ்வொரு அடியாய் மண்டபத்திற்குள் வைக்கின்ற பொழுதெல்லாம் உன் ஞாபக மழையில் நனைந்தவாறு நீ மணமேடையில் பெண்ணாய்.

 

 

 

 


 

35. மணமேடை

 

நண்பரின்

திருமண அழைப்பு

உன் ஞாபகங்களோடு

கைக்கோர்த்த

வண்ணமாய்

நான்

மணமேடையில்

நீ

மணப்பெண்ணாக.

 

 

 

 

 

 

 

உன் ஞாபக மழையில் 36.

 

அறையில் முடங்கிக் கிடந்தேன். மழைக்குப் பிந்தைய வானம் போல மனமும் வெறுச்சோடிப் போயிருந்தது. உன் நினைவுகளில் நான் முடமாய்; செய்வதறியாது. வாசிக்கலாம்; அறையில் நிரம்பிவழியும் புத்தகப்பேழை. மனம் யோசிக்கவில்லை, உன் நினைவில் என் சுவாசக் காற்று. ஒலிப்பேழைகளைத் தட்டிவிட்டு, பழைய பாடல்களையாவது கேட்கலாம், இருந்தும் உன் நினைவுகளிலேயே இலயித்துபோன மனம்; நலிந்து போயிருந்தது. வெப்பக் காற்றிலும் முடுக்கிவிடாமல் முடங்கிக்கிடக்கும் மின்விசிறி பரிதாபத்தோடு என்னைப் பார்த்தவாறு. உன் இதயத் துடிப்பு அறை முழுவதுமாய் வியாபித்திருந்தது. டிக் டிக் என்று துடிக்கும் உன் இதய ஓசை என் வீட்டு சுவர்கடிகாரத்தில். என் ஞாபகத்தில் உன் இதயத்தை இங்கேயே மறந்து வைத்துவிட்டாயா? கவலை எதற்கு என்னிடம் பத்திரமாய்; உன் வீட்டில் வேண்டுமென்றே நான் விட்டு வந்த இதயம் இன்னும் துடிக்கிறதா? உன் ஞாபக மழையில் நனைந்தவாறு காதுகளைப் பதியம் செய்கின்றேன் சுவர்கடிகாரத்தில். இன்னும் பலமாய் டிக் டிக் டிக்.

 

 

 

 


 

 

 

36. மணித்துளி

 

நகரும் முட்கள்

டிக் டிக் டிக்

துடிக்கும்

சுவர்கடிகாரம்

உதிரும்

மணித்துளிகள்

ஒவ்வொரு துளியிலும்

உன் ஞாபகம்.

 

 

 

உன் ஞாபக மழையில் 37.

 

மரங்கள் இந்தப் பூமியின் தோழர்கள். பரிவு கரங்களை நீட்டி பூமியின் சுவாசப் பைகளைச் சுத்தப்படுத்தும் சுரப்பிகள். இந்த உலகம் தன் சுழற்சியில் கொஞ்சமும் மாறாமல் இன்னும் அமைதியாய்ச் சுற்றிவருவதற்கு இந்த மரங்களின் தவமே காரணம். நாம் பூஞ்சோலைக்குள் நுழையும்போதெல்லாம் அவற்றிற்கு நன்றி கூறுவதற்கு நாம் மறந்ததே கிடையாது. அதன் நிழலடியில் அமர்ந்தவாறு நாம் எவ்வளவு அனுபவங்களை அசைபோட்டோம்? எத்தனை மணித்துளிகளை மௌனமாய் பகிர்ந்து கொண்டிருப்போம். அவை பச்சை நிற முனிவர்கள். உலக மேன்மைக்குக் காலங் காலமாய் தவமிருப்பவை. உலகை நம்மைவிட அதிகமாய் நேசிக்கின்றன. உலக மக்களை நேசிக்கின்றன. அதிலும் அடிக்கடி நம்மோடு கைக்குலுக்கிக் கொள்வதால் நம்மையும் அவை அதிகமாகவே நேசிக்கின்றன. தனிமையில் என் கால்கள் அம்மரங்களைச் சுற்றி வரும்போதெல்லாம், உன் ஞாபக மழையில் நனைந்தவாறு, என் மீது ஒவ்வொன்றாய் உதிரும் உலர்ந்த இறகுகள்.

 

 

 

 

 


 

37. மரம்.

 

காதல் மழையில்

நனைந்தவாறு

கரங்களைக்

கோர்த்த வண்ணமாய்

பூஞ்சோலையில்

மரங்களைச்

சுற்றினோம்

அந்த

நினைவுகளோடு

நானும்

மரமாய்.

 

 

 

 

உன் ஞாபக மழையில் 38.

 

அலுத்துப்போன சூரியன். நடை தளர; அடிவானில் தனது வீட்டை நோக்கி கைநிறைய வெளிச்சத்தை அள்ளிக் கொண்டு, அழுக்கு வியர்வையைச் சிந்தியவாறு. உன் நிழலைத் தொடர்ந்தவாறு நான். நீ ஏதோ ஒரு திசையில்; ஏதோ ஒரு சிந்தனை, மௌனமாய்க் கொஞ்சமும் முகம் திருப்பாமல். நான் பொறுமையாய்; அமைதியாய் உன் காதுமடல்களைக் காயப்படுத்தக் கூடாதென்று பாதங்களை மென்மையாய்ப் பதித்தவாறு பின் தொடர்கின்றேன். நீழூம் உன் நிழல்; எட்டிப் பிடிப்பதற்கும் தொட்டுப் பார்ப்பதற்கும் துடிக்கும் கரங்கள். நீ அமைதியாய் வானின் நிலவுபோல நான் பின்தொடர்ந்தவாறு மேகங்களாய். துடிக்கும் மனசு; எட்டிப் பார்க்கும் ஏக்க உணர்வுகள். சென்ற தூரமும் இலக்கும் நினைவிலில்லை. உன் ஞாபக மழையில் நனைந்தவாறு சுவடுகளைச் சேகரித்தவாறு பின் தொடர்கின்றேன்.

 

 

 

 


 

 

 

38. சுவடுகள்

 

காலார நடந்த

ஒரு சாயுங்காலத்தில்

உன்னைப்

பின் தொடர்ந்தேன்

உன்

சுவடுகளைச்

சேகரித்தவாறு.

 

 

 

 

 

 

 

 

உன் ஞாபக மழையில் 39.

 

நீண்ட நாட்களுக்கும் பிறகு, ஓர் இரவுப் பயணம். தனிமையில் உன் நினைவுகளை அசைபோட்டவாறு. வடக்கு நோக்கி இரயில் பயணம். முதல் அனுபவம். பெட்டிக்குள் இருக்கைகள் நிரம்பி இருந்ததால் கொஞ்சம் அசட்டு தைரியம். சன்னலோரமாய் ஓர் இருக்கை. உலகத்தை நான் எட்டிப்பார்த்தவாறு, வெளியில் நகரும் மனித கூட்டம் கூண்டுக்குள் என்னை இரசித்தவாறு. இரயில் இன்னும் நகரவில்லை. மனம் நீண்ட தூரம் நகர்ந்து கொண்டிருந்தது. உடலுக்கு உள்ள தோய்வு மனதிற்கு இல்லை அதனால்தான் எல்லா நேரமும் விழித்துக் கொண்டே நகர்ந்து கொண்டிருக்கிறது. சற்று நேரத்தில் கதவுகள் மூட, அறிவிப்பொடு முனகிக் கொண்டு மெல்ல புறப்பட்டது இரயில். இப்பொழுது வெளியில் எல்லாமே நகர்வுகளாய். இருமருங்கிலும் விழிபூத்த மரங்கள், உன் ஞாபக மழையில் நனைந்தவாறு சாய்ந்தப்பொது, நகரும் மரங்களாய் நீ.

 

 


 

 

39. பயணம்

 

நீண்ட பயணம்

இரயிலின்

சன்னலோரத்தில்

தூக்கமில்லாமல்

நகரும் இரவு

பரிதவிக்கும் மனசு

நகரும் மரங்களாய்

நீ.

 

 

 

 

 

 

 

உன் ஞாபக மழையில்.

 

இதுவரை இல்லாத சூன்யம், என்னை வேதனை எரிமலைக்குள் தள்ளி வேடிக்கைப் பார்த்தது. நீ அருகில் இருந்த நாட்களில் உன் சுவாசக் காற்றில் என் சுவாசம் நீண்டுகொண்டிருந்தது. உன்னைத் தேடி வந்த நாட்களை விட உன்னைப் பின்தொடர்ந்த நாட்கள்தான் அதிகம். நீ இங்கிருக்கும்போது ஏதோ ஒரு திருப்தி. நீண்ட விடுமுறை நீ சொல்லிக் கொள்ளாமலேயே உன் கிராமத்துக்குத் திரும்பியிருந்தாய். கண்கள் எல்லா திசைகளிலும் உன்னைத் தேடின. கால்கள் நீ பயணப்பட்ட பாதைகளிலெல்லாம் உன் நினைவுகளைச் சேகரித்தவாறு தளர்ந்திருந்தன. உன் விடுதியின் பக்கமாக வந்தபோது தட்டுப்பட்ட உன் தோழி செய்தி சொன்னாள். நாட்களை நகங்களைக் கடித்து, காயப்பட்ட விரலாய், நகங்களைக் கடிந்து கொள்வதைப்போல நொந்து கொண்டேன். நாட்காட்டியினை முறைக்கின்றேன். ஏன் நாட்கள் நகரவேயில்லை? காலத்திற்கு என்மேல் ஏன் இவ்வளவு வெறுப்பு. ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு யுகமாய் நகரும் வேதனியில் உன் ஞாபக மழையில் நனைந்தவாறு நான்.

 


 

 

40.  நாட்கள்

 

நீ

ஊருக்குப் போயிருந்த

சில நாட்கள்

எல்லாமே சூன்யமாய்

எனது

நாட்காட்டியில்

நகராத

நாட்கள்.

 

 

 

 

 

 

 

 

 

 

 

உன் ஞாபக மழையில்

 

விடுமுறை காலங்கள் வெறுச்சோடி போகிறது. நீண்ட ஓய்வு, வேலையில்லாமல் இருந்துவிடலாம். ஆனால் உன்னைப் பற்றி சிந்திப்பதே ஒரு வேலையாகிவிட்டது. என்னை அடிக்கடி நானே நாடுகடத்திக் கொள்வதால், நட்புப் பாராட்டும் முகங்களுக்கு என்மீது வருத்தம். எத்தனை முறைதான் அவர்களின் அழைப்புகளை அலைக்கழிப்பது. ஒரு முறை என்னைச் சுற்றி ஒரு வியூகம் அமைத்தவாறு நண்பர்கள். உலகைச் சுற்றிவர பட்டியல் நீள்கிறது. பட்டிமன்றமாய் வாக்குவாதம். எனக்கு ஒன்றுமே நினைவிலில்லை, அங்கு இருப்பதாய்கூட எனக்கு நினைவில்லை. தர்பார் கலைந்தது ஒரு தீர்க்கமான முடிவோடு, நாளை சுற்றுலா. இரண்டு மூன்று நாட்களுக்கு ஒரு பனி பிரதேசத்தில். எப்படி நீ இல்லாமல் நான் மட்டும் தனிமையில். இரவெல்லாம் வேதனையோடு நகர்ந்தது. விடியலில் வண்டி புறப்பட்டது. வேண்டா வெறுப்போடு நண்பர்களோடு நான். போய் சேர்ந்ததும் எல்லோரும் பாட ஆரம்பித்தார்கள் கவிஞர்களாய். பசுமையும் இயற்கையும் அவர்களுக்கு அமுது படைத்தது. உன் ஞாபக மழையில் நனைந்தவாறு பார்வையை வீசினேன் அந்தத் தனிமை எனக்குப் பாலைவனமாய் மணல் வாறி வீசியது.

 

 


 

 

 

41. பாலைவனம்.

 

நண்பர்களோடு

கடல் கடந்து

ஒரு சுற்றுலா

பாலைவனப் பயணம்

அது எனக்கு

என்னோடு

நீ இல்லாததால்.

 

 

 

 

 

 

 

 

 

 

உன் ஞாபக மழையில்.

 

இப்பொழுதெல்லாம் தனிமை எனக்கு அதிகமாய்ப் பிடித்திருக்கிறது. தனிமைக்கும் என்னை மிகவும் பிடித்துவிட்டது. மனித நாடமாட்டமில்லாத, ஆர்ப்பரிப்புக்கும் ஆரவாரத்திற்கும் அப்பாற்பட்ட இடங்களை மனம் தூண்டில் போட்டுத் தேடுகிறது. தனிமை மிகவும் சுகமானது. மனம் வேதனை வடுக்களையெல்லாம் கொஞ்சம் மறந்து நிம்மதி வானில் சிறகடித்துப் பறக்கிறது. மனம் என்னோடு பேசுகிறது. நானும் மனதிடம் மனம்விட்டு பேசுகின்றேன். வசந்த காலத்துப் பூக்களைப்  போன்ற இனிமையான அனுபவம் அது. உன்னைப்பற்றி நான் அதிகமாய் சிந்திக்கின்றேன் எந்த தொந்தரவும் இல்லாமல். கற்பனை நீரூற்று எந்தத் தடங்களும் இல்லாமல் நேர்த்தியாய் அதன் அச்சில் பயணிக்கின்றது. எனது மூச்சுக் காற்றை இப்பொழுது ஆழமாய் உணர்கின்றேன். மூச்சு விடுவதையே மறந்துபோயிருந்த தருணத்தில் தனிமையில் உன் நினைவுகளைச் சுவாசிக்கும்போது எனக்குள் உயிர் ஒட்டியிருப்பது ஞாபக பெட்டகத்தை நிரப்பிக்கொண்டிருக்கிறது. ஒவ்வொரு மூலையிலும் தனிமையைத் தேடுகிறேன். ஒவ்வொரு மணித்துளியும் தனிமைக்குத் தவமிருக்கின்றேன். உன் ஞாபக மழையில் நனைந்தவாறு, தனிமையில் உயிர்த்தெழுகிறேன்.

 

 

 


 

42. தனிமை

 

தனிமை

எனக்கு

அதிகமாய்ப் பிடித்திருக்கிறது

அடிக்கடி

எனக்குள்

நானே வெளிநடப்பு

செய்கிறேன்

போததற்கு

என்னை நானே

நாடுகடத்திக் கொள்கிறேன்

உனது

இனிய நினைவுகளை

உயிர்ப்பிப்பதற்கு.

 

 

 

 

 

 

உன் ஞாபக மழையில்

 

உருண்டையான இந்தப் பூமிப் பந்தை மனக் கால்களால் அடிக்கடி உதைத்துப் பார்க்கிறேன். உருளட்டும் இந்தப் பூமியில் படர்ந்திருக்கும் மனித கொடிகளெல்லாம் ஒரு மூலையில் குவியட்டும். ஒரு பக்கம் காலியாக வேண்டும். அந்தக் காலியான இடம் நமக்குச் சொந்தமாகட்டும். யாருமே இல்லாத, எல்லைகளே இல்லாத ஒரு தேசம் அதில் உதயமாகட்டும். அது நமக்கு மட்டும் சொந்தமான உலகம். அதில் வேறு யாருக்கும் இடமில்லை. தனிமைத் துறவில் அமைதி அந்த உலகத்தில் படரட்டும். அந்த உலகை உருவாக்கும் மாபெரும் பணியில் பம்பரமாய் மனம் சுழன்று கொண்டிருக்கிறது. அந்த ஆக்கப் பணிகள் நிறைவடையும்போது, உன்னை அழைக்கிறேன். நீயும் என்னோடு வா. ஒரு தனிமை தேசத்தில் நமது உணர்வுகளுக்குக் கொஞ்சம் உயிரூட்டுவோம். இதுவரை மனக்கிடங்கில் குவியலாய்ச் சேகரித்து வைத்திருக்கும் நினைவுகளைப் பகிர்ந்துகொள்வோம். உன் ஞாபக மழையில் நனைந்தவாறு கற்பனை வானில் சிறகடிக்கும் மனம்.

 

 


 

43. பரிமாறலாம்.

 

என்னவளே

வா

ஆள் நடமாட்டமில்லாத

ஒரு

தனிமை உலகத்திற்குப்

போகலாம்

உணர்வுகளுக்கு

இரசிக்கவும் ருசிக்கவும்

கற்றுக் கொடுப்போம்

மனதைக்

காற்று மண்டலத்தில்

தூக்கி எறிந்து

நமது

நிரப்பப்படாத தனிமையைப்

பரிமாறிக்கொள்வோம்.

 

 

 

 

 

உன் ஞாபக மழையில்

 

       பிரிவு! இந்த வார்த்தையை உச்சரிக்கும்போதே உதடுகளில் தீப்பற்றிக் கொள்கிறது. வேதனையில் எரிமலையாய் மனம் ஒவ்வொரு மணித்துளியும் வெடித்துச் சிதறுகிறது. இந்த வேதனை எனக்கு மட்டும்தானா? உனக்கும்தானே! ஐந்திணையில் பிரிவிற்குப் பாலையை வைத்தார்கள். இலக்கியங்களில் பசலையைப் படம்பிடித்துக் காட்டினார்கள். தமிழ்ச் சினிமாவில் சோக கீதத்தை இசைத்து விழிமடல்களை மணற்கேணியாய் மாற்றினார்கள். நான் என்ன செய்வது? வேள்விப் புதிரில் குளிர்காயும் மனம். யோசித்துப் பார்க்கிறேன். நான் என்பது நீ. நீ என்பது நான். இன்னும் எவ்வளவு காலத்திற்கு நாம் வேற்றுமை ஆடைகளில் உலா வருவது. உன்னுள் நானும் என்னுள் நீயும் கலந்து ஒன்றாய் எழுவதை உன் ஞாபக மழையில் நனைந்தவாறு மனம் அசைபோடுகிறது.

 

 

 


 

       44. நாமாக

 

       நீ

       நீயாக

       நான்

       நானாக

       எப்பொழுது

       நாமாக?

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

 

உன் ஞாபக மழையில்.  

 

நிலாப் பெண்ணே! உன் சிரித்த முகம் எப்பொழுதும் என் மன மலைகளின் முகடுகளில் எதிரொலிக்கிறது. உன் இதழ் சிந்தும் புன்னகை பூக்களுக்காக என் விழிகள் பூத்திருக்கின்றன. சொட்டுச் சொட்டாய் நீ சிந்தும் புன்னகை பனித்துளிகளில் என் மனம் முழுவதும் சாயம் பூசியிருந்த துன்பங்கள் அடையாளம் தெரியாமலேயே மறைந்துவிடுகின்றன. முத்துக்களை நான் பார்த்ததில்லை. ஆனால் உன் இதழ் இடுக்குகளில் நீ சிரிக்கும்போது வெண்மையாய் எட்டிப்பார்ப்பதை வைத்து நான் அவற்றை அடையாளம் கண்டுகொண்டேன். உன் முகத்திற்கு உன் சிரிப்புதான் அணிகலன். உன்னை அலங்கரிப்பதற்கு வேறு ஒன்றுமே தேவையில்லை. உன் சிரிப்பின் கலகல ஒசையில் எனக்குள் எல்லாமே ஒடுங்கிவிடுகிறது. நாம் ஒன்றாக கழித்த நாட்களில் நீ சிந்திய சிரிப்பு முத்துகளை என் தனிமையில் ஒவ்வொன்றாய்ச் சேகரிக்கின்றேன் உன் ஞாபக மழையில் நனைந்தவாறு.

 

 


 

 

45. சிரி

 

ஒரு முறையாவது

நீ

வாய்விட்டுச் சிரி

உன்

முத்துப்பல் வரிசை

தெரிய

இனிய நினைவுகளோடு

நகரும்

என் நாட்கள்.

 

 

 

 

 

 

 

 

உன் ஞாபக மழையில்.

 

       காலம் கறைகிறது. இளையுதிர்காலமாய் மணித்துளிகள். கரைகளில் மண்டியிட்டு மடிந்துபோகும் அலைகளாய் பொழுதுகள். அடிக்கடி ஆடை மாற்றிக்கொள்ளும் இயற்கை. நிமிடத்திற்கு நிமிடம் முகம் மாற்றிக் கொள்ளும் வானம். எல்லாமே மாறுதல்களை உள்வாங்கிக் கொண்டு மௌனமாய் நகர்கின்றன. மறதிப் புழுதியில் மறைந்துவிடுகின்றன. உன் நினைவுகள் மட்டும்தான் எனக்குள் மாறாமலேயே நிற்கிறது. என் மனதைக் கண்டு கொஞ்சம் கொஞ்சமாய் தேய்ந்து காணாமல் போகும் நிலவு வெட்கி தலைகுனிகிறது. எனக்குள் நினைவுகள் வளர்கின்றன. ஒவ்வொரு நாளும் மனக்கிடங்கில் மூட்டை மூட்டையாய் நிரம்பிய உன் நினைவுகள் எனக்குள் இமயமாய். வயது கூடுவதும், முதுமை நெருங்குவதும் எனக்கு நினைவிலில்லை. உன்னுடன் சேர்ந்து கழியும் பொழுதுகளெல்லாம் என் இளமை மீண்டும் மெருகேறுகிறது. விழித்திரைகளில் நரையில்லை. உன் ஞாபக மழையில் நனைந்தவாறு நாடி நரம்புகளில் காவிரியாய்ப் பாயும் என் இளமைகள்.

 

 

 


 

 

46. பொழுதுகள்

 

       நினைவுகள்

கூட்டல் போட்டுக்

கொள்கின்றன

வயது

இன்னும் கழித்தலாகவே

நாம்

சேர்ந்திருக்கும்

இனிய பொழுதுகளில்.

 

 

 

 

 

 

 

 

உன் ஞாபக மழையில்

 

கனவுகளும் விழித்திருக்கின்றன. என்ன அழகான விழிகள் அதற்கு. எனது உறக்கத்தில் உன்னை அழகாகப் படம்பிடித்துக் காட்டுகின்றன. கனவிலும் நான் உன்னோடு பேசுகின்றேன். எனது கனவில் ஒவ்வொரு பொழுதும் உனது கனவை எட்டிப்பார்க்கின்றேன். எத்தனை வண்ணங்கள் அதற்கு. நீ உன்னுள் மறைத்து வைத்தாலும், எனக்குத் தெரியாமல் ஆழ்மனதில் புதையலாய்த் தேக்கி வைத்தாலும் என் கனவுகள் உன் கனவை நன்றாகவே அடையாளம் கண்டு விட்டன. ஏழ்கடல் மணலுக்கு அடங்காத உன் ஆசைகள் இருந்தும் இன்னும் மௌனமாகவே பேசுகின்றாய். என் கனவில் உன் கனவின் நலம் விசாரித்தேன். உன் ஆசைகளை எடுத்துச் சொல்ல அதற்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. அதுவும் உன்னைப்போலவே மௌனம் பாடியது. உன் ஞாபக மழையில் நனைந்தவாறு உன் கனவுகளில் நானும் பயணிக்கின்றேன்.

 

 

 

 


 

47. கனவுகள்

 

ஒரு

மஞ்சள் மழையில்

மேகத் திரையில்

முகம் துவட்டும்

வானவில்

உனக்குள்

இத்தனை கனவுகளா?

 

 

 

 

 

 

 

 

உன் ஞாபக மழையில்.

 

மலரைவிட மென்மையானவை உணர்வுகள். அகராதியின் பட்டியலுக்கு அப்பாற்பட்டவை. ஒரு பொழுதில் வேர்விட்டு, கிளைவிட்டு, பூவிட்டு, காய்விட்டு கனியாகியவை அல்ல. எவ்வளவு காலம் திரட்டியவை? நினைவிலில்லை. ஆனால் அது ஒரு நீண்ட காலம். விழிகளில் உன்னை உள்வாங்கிய முதல் நாள் தொட்டு இன்றுவரை அவை என்னை இயக்கிக் கொண்டிருக்கின்றன. மனப்பாத்திரத்தில் உன் உணர்வுகள் ஒரு கலவையாய். நான் மட்டுமே சுவைத்துக் கொண்டிருக்கிறேன் அறுசுவைக்கு அப்பாற்பட்ட ஒரு சுவையை. யாருடன் பரிமாறிக்கொள்ள முடியும்? உன்னைத் தவிர. இந்த உணர்வுகளுக்கும் ஒரு மணம் உண்டு. எந்த மலர்களிலும் இல்லாத மணம் அது. எனது நாசித் துவாரங்களுக்கு மட்டுமே அது புரியும். நமது தனிமை சந்திப்புகளில் உணர்வுப் போராட்டங்களில் மனதிற்குள் ஒரு பிரளயம். கழுத்துவரை எட்டிப்பார்ப்பதை விழுங்கியவாறு நாம். உன் ஞாபக மழையில் நனைந்தவாறு மெல்லியதாய் மனதிற்குள் இளையோடும் உணர்வுகளை உரசிப் பார்க்கிறேன்.

 

 

 


 

 

48. உணர்வுகள்

 

பூஞ்சோலை

அடுக்கடுக்காய்

மணம் ஒழுகும்

பூக்கள்

விழிகளின் படையல்

பக்கத்து இருக்கைகளில்

நாம்

தள்ளியே இருக்கின்றோம்

ஒட்டிக் கொண்ட

உணர்வுகள்.

 

 

 

 

 

 

 

உன் ஞாபக மழையில்.

 

       வண்ண வண்ண பூக்கள். வானவில்லின் வண்ணங்களில் தோய்த்தெடுத்தவை. பூஞ்சோலை நிரம்பி வழிந்தது. அது ஒரு வசந்த காலம். நமது காதல் வாழ்க்கையைப் போல. மலர்களின் வண்ணங்களைச் சிறகுகளில் சேகரித்துக் கொண்டு சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சிகள். வண்டுகளின் அணிவகுப்பு. மெல்லிய இசை மழையில் நனைந்தவாறு பூக்கள். இதழ் விரிந்த பூக்களின் தவிப்பு. தனிமையின் பரிதவிப்பு. எல்லாமே மாயமாய். பூஞ்சோலைக்குள் ஒரு பரபரப்பு. மலர்களின் இதழ்களை உரசத் துடிக்கும் வண்டுகள். இன்னும் தயக்கத்தோடு சிறகடிக்கும் வண்ணத்துப் பூச்சிகள். தேனின் சுவை அவற்றிற்குப் புதிதல்ல. இருந்தும் தயங்கியவாறு ஒரு தடுமாற்றம். மலர்களுக்குத் தெரியும் அவற்றின் எண்ணம். வண்டுகளுக்கும் புரியும் மலர்களின் வண்ணம். அந்த இயற்கையின் காதல் நாடகத்தில் மனம் வயப்பட்டது. எங்கிருந்தோ ஒரு ஏக்கம் அடிமனதில் உதயமானது. அதன் உணர்வுக் கிரணங்கள் மனம் முழுவதும் பாய்ச்சிக் கொண்டிருந்தது. உன் ஞாபக மழையில் நனைந்தவாறு, உன்னைச் சுற்றி வரும் என் நினைவுகள்.

 

 


 

       49.வண்டுகள்

      

பூக்களை

       உரசிக் கொண்டு

       வலம் வரும்

       வண்டுகள்

       வண்ணங்களை

       இறகுகளில் சேகரிக்கும்

       வண்ணத்துப்பூச்சிகள்

       நானும்

       அப்படித்தானே?

       உன்னைச்

       சுற்றி சுற்றியே

       வந்துகொண்டிருக்கிறேன்.  

 

 

 

 

 

 

உன் ஞாபக மழையில்

 

       முடிக்க முடியாத பணிகள் அடுக்கடுக்காய். ஒவ்வொரு நாளும் உயர்ந்து கொண்டே போகிறது. மனம் தள்ளிப் போடுகிறது. சோம்பல் எள்ளிநகையாடுகிறது. காலச் சக்கரத்தில் அச்சாணியாய் மறதி சொருகிக் கொள்கிறது. கிடப்பில் கோரிக்கையற்று வெறுச்சொடி கிடக்கும் பணிகள். நெருங்கும் நாட்கள். நெறிக்கப்படும் குரல்வளையம். திக்குமுக்காடி நினைவில் முட்டியதை மட்டும் தொட்டுப் பார்க்கிறேன். நினைவில் இல்லாததை மறதிக் கறையான்கள் பதம்பார்த்து விட்டன. வாழ்க்கையை நகர்த்தியாக வேண்டும். வேறு வழியில்லை உள்ளுக்குள் நிரம்பி வழியும் உன் நினைவுகள். மறப்பதாய் இல்லை. மறந்தும் மறந்ததாய் நினைவிலில்லை. மறதிப் புழுதியில் ஒவ்வொன்றாய் மூழ்கியவாறு. பணிகள், நண்பர்கள், உறவுகள், படித்தவை என்று அடுக்கடுக்காய். ஆனால் உன் முகம் மட்டும் மறந்ததாய் நினைவிலில்லை. ஒவ்வொரு நாளும் தேயாத முழுநிலவாய் இதய வானில் உலா வந்துகொண்டிருக்கிறது. உன் ஞாபக மழையில் நனைந்தவாறு, பட்டைத் தீட்டப்பட்ட வைரமாய் மறதிப் புழுதியில் சுடர்விடும் உன் மதிமுகத்தை அசைபோடுகின்றேன்.

 

 

 

 

 


 

              50. மறதி

             

எனக்கு

              இதுவரை

              ஞாபகமில்லை

              எப்பொழுதாவது

              உன்னை

              மறந்தும் மறந்ததாக.

 

 

 

 

 

 

 

 

 

உன் ஞாபக மழையில்

 

       ஒற்றை மரம் காற்றில் அசைந்தவாறு. அதன் தாளத்திற்கு ஏற்ற அசைவு. சாயுங்காலம், வானம் மஞ்சளையும் சிவப்பையும் முகத்தில் அள்ளிப் பூசிக்கொண்டு. மரம் அந்தச் சாயத்தை தன்னுடைய விரல்களுக்கு மருதாணி பூசியவாறு. தனிமையில் ஒரு குயில் மரக்கிளையில். நீண்ட மௌனம் கலைந்து கூவுகிறது. சோகமாய் அதன் கீதம் தனிமையின் வேதனைத் தவிப்பு. சோடியை இன்னும் காணவில்லை. அலை அலையாய் கூவுகிறது. கான வரிகளில் அதன் தேடல்கள். மின்னலும் இடியுமாய் மிரட்டும் வானம். இன்னும் குயில் பின்வாங்கவில்லை. கொஞ்சமும் மாறாத தாளம், இராகம் குயிலின் குரலில் ஒட்டியிருந்தது. உனக்கும் குயிலைப்போன்ற இனிமையான குரல் இருந்தும் நீ ஏன் பாடுவதில்லை. உனது பாடல் வரிகளுக்கு தவமிருக்கும் மனம். உனது இராகத்தை நான் பசியாற வேண்டும். நீ எப்பொழுதாவது பாடுவாய் என்று கனவுகளுக்கு வெள்ளையடித்துக் கொண்டிருக்கும் எதிர்பார்ப்புகள். மழை மேகங்களைக் கசக்கிப் பிழிந்தவாறு கொட்டும் மழை. நகராமல் குயில். இன்னும் பலமான குரலில் மழையின் சத்தத்தைக் கிழித்துக் கொண்டு. வான மழையிலும், கான மழையிலும் நனைந்தவாறு நான் உன் ஞாபக மழையில்.

 

 

 


 

 

       51. பாடு

 

       நீ

       எப்பொழுதாவது

       பாடுவாய் என்று

       எதிர்பார்ப்புகளோடு

       காத்திருக்கிறேன்

       உன்

       ஞாபக மழையோடு

       கான மழையிலும்

       நனைவதற்கு.

 

 

 

 

 

உன் ஞாபக மழையில்.

 

 

வானில் முழு நிலவு. அழகிய பௌர்ணமி காலம். வானத்தில் மகுடம் சூட்டியது போல. நிரம்பி வழியும் ஒளி. சுற்றிலும் வட்டம் பிடித்து, இமை கொட்டாது விழித்திருக்கும் விண்மீன்கள். கொள்ளை அழகு. இந்த உலகத்தையே விலை கொடுத்தாலும் வாங்க முடியாத அழகு. அவ்வப்போது மேகக் கயவர்கள் சூழ்ந்து கொண்டாலும் தன்னை விடுவித்துக் கொண்டு நாணத்தோடு நகரும் நிலவு. மூவுலகின் மொத்த அழகையும் தன்னுள் வைத்துக் கொண்டு வேடிக்கைக் காட்டுகிறது. மனம் அதன் அழகில் மூழ்கிக் கிடக்கிறது. கொஞ்சம் கொஞ்சமாய் அந்த அழகை பருகியவாறு மனம். பேரழகைக் கண்டு உள்ளுக்குள் பேரலையாய் கவிதைகள். மனம் பேசுகிறது. நீ தான் அந்த நிலவு; கடவுளாய். கடந்தும், உள்ளும் ஒளிவீசியவாறு. திறந்த வெளியில் கைகளை ஏந்தியவாறு ஒளித் துளிகளைச் சேகரிக்கின்றேன். கைகளில் நிரம்பி வழிகிறது உன் நினைவுகள். தேகமெங்கும் கட்டித் தழுவியவாறு சிந்தும் ஒளித்துளிகளில் உள்ளுக்குள் இன்ப அதிர்வுகள். ஒளி மழையில் நனைந்தவாறு உன் ஞாபக மழையில் நான்.

 

       52. வாஞ்சை

 

       முழு நிலா

       ஒளிக் கடலில்

       மூழ்கிய வானம்

       வாஞ்சையோடு

       பார்க்கிறேன்

       நிரம்பி வழியும்

       ஒளியாய்

       உன் நினைவுகள்.

 

உன் ஞாபக மழையில்.

 

ஏடுகளில் கவிதைகள். உன் நினைவுகளின் பிம்பங்கள். நகரும் தூரிகையில் தவழும் குழந்தைகள். ஒவ்வொரு சொல்லாய் ஏடுகளில் உதிரும்போது ஒட்டிக் கொண்டிருக்கும் உன் நினைவுகள். நானாக எழுதவில்லை. என்னுள் இருந்துகொண்டு நீ எழுதுகிறாய். ஒவ்வொரு சொல்லாய் என் மனதோடு நீ உச்சரிக்கும்போது ஏடுகளில் கவிதையாய். இந்தப் பதிவேடுகளில் என் முகம் மறந்து போனது; மறைந்துபோனது. ஒவ்வொரு கவிதையிலும் உன் முகம் பதிவாகிறது. அதனால்தான் கவிதைகள் அழகாகத் தெரிகின்றன. கவிதைகளில் உனது தேடல்கள், ஏக்கத்தொட்டு நகரும் சொற்கள். பேசும் ஊமையாய் எட்டிப் பார்க்கும் உணர்வுகள். எழுத்துக் கூட்டி வாசித்தவர்கள் சொன்னார்கள் கவிதையில் உயிர் இருக்கிறது என்று. வாசித்தவர்கள் சொன்னார்கள் கவிதையில் சுவாசம் தெரிகிறது என்று. பாடலாய்ப் பாடியவர்கள் சொன்னார்கள் ஒரு உயிர் பாடுகிறது என்று. மொத்தத்தில் கவிதையில் ஒட்டிக் கொண்டிருக்கும் என் உயிரை யாரும் காணவில்லை. நீயாவது வாசித்துப் பார்! ஒருமுறையாவது சுவாசித்துப்பார் அடுத்து நகரும் மணித்துளிகளை யாசிக்கும் என் உயிர். உன் ஞாபக மழையில் நனைந்தவாறு மீண்டும் மீண்டும் சுவாசித்துக் கொண்டிருக்கிறேன் என் கவிதைகளை.

 

       53. சுவாசம்

 

       எனது

       கவிதைகளை

       ஒரு முறையாவது

       வாசித்துப் பார்!

       அடுத்தப்

       பொழுதுவரை

       எனக்குள்

       சுவாசம் இருக்கும்.

 

 

உன் ஞாபக மழையில்.

 

எல்லாவற்றிலும் உன் முகம் பார்த்துப் பழகிப் போய்விட்டது எனக்கு. என் நிழற் கண்ணாடிகூட நான் முகம் பார்க்கும்போது உன் முகத்தைத்தான் காட்டுகிறது. என்னைச் சுற்றி எல்லாமே நீயாகத்தான். என் நிழல்கூட நீயாகத்தான். அதனால் நிழலைக்கூட மிதிக்க மனமில்லாமல் நிழல் காயம்படக் கூடாது என்று பாதங்களை கவனமாய் நகர்த்துகின்றேன். என்னைக் கடந்து செல்பவர்கள்கூட உன் முகத்தை அவர்களின் முகத்தில் ஏந்தியவாறு. என் விழிப்படலங்களில் உன் முகம் ஒட்டிக் கொண்டது. பார்வை பட்டுத் தெறிக்கும் எல்லா பக்கங்களிலும் உன் முகம்தான் நிழலாய். மொத்தமாய் உன் நினைவுகளில் நான் தொலைந்து போனேன். உன் நினைவுக் கடலில் முழ்கி மூச்சி முட்டி தவித்துக் கொண்டிருக்கிறேன். நகரும் மணித்துளிகள், உதிரும் நாட்கள் எல்லாமே உன் நினைவாய். சுவாசப் பைகளை நிரப்பி மீண்டும் காலியாக்கும் காற்றும் உன் நினைவாய். இப்படி உன் நினைவுமயமாய் நான். நீ எப்படி? என்னை நினைக்கிறாயா? ஒவ்வொரு வியலிலும் என் நினைவுகளில் மனம் கழுவுகின்றாயா? ஆவலில் துடிக்கும் மனசு. பனிப்பொழுதில் உன் நினைவுகளைச் சுமந்தவாறு, உன் ஞாபக மழையில் நனையும்போது மெல்லியதாய் எட்டிப்பார்க்கும் தும்மல்.

 

       54. நினை

 

       உன்

       நினைவுகளோடு நான்

       நீயும்

       என்னை

       அடிக்கடி

       நினைக்கிறாயா?

       நொடிக்கொருமுறை

       வந்துபோகும்

       தும்மல்.

 

உன் ஞாபக மழையில்.

 

தபால் நிலையம் எனக்கு தேவலோகமாய், உன் நினைவுகளைப் பக்குவமாய்ப் பத்திரப்படுத்தி கடித உறையில் போட்டு தபாலில் சேர்க்கும் பொழுதெல்லாம் அதில் தபால் தலைகளை மட்டும் ஒட்டவில்லை என் நினைவுகளையும் சேர்த்து ஒட்டி அனுப்புகின்றேன். உனக்குக் கடிதம் எழுதுவதே எனக்குப் பொழுதுபோக்காக ஆகிவிட்டது. ஒவ்வொர் இரவும் உனது நினைவுகளைச் சுமந்த மனம் உனக்குக் கடிதம் போடத் தூண்டுகிறது. எனது எண்ணக் கலவையை வண்ணக் கடிதங்களாக உனக்கு வரைந்துகொண்டிருக்கிறேன். அவை கடிதங்களல்ல அழகான காதல் ஓவியங்கள். எனது நிகராளியாய் உன்னுடன் தனிமையில் பேசும். சமுத்திரமாய் படர்ந்து கிடக்கும் என் உணர்வுகளை உன் மனச் சுவரில் சாயம் பூசும். வண்ணக் காகிதங்கள், வண்ண வண்ண தூரிகைகள், இதய கல்வெட்டுகளாய் அழகான கடித உறைகள் இவற்றை காணும்போதெல்லாம் எனது சேமிப்புக் கிடங்கில் வாங்கிக் குவிக்கின்றேன். உனக்கு மணம் சுமந்த காகிதங்களில் மனச் சிந்தனையைப் பதியம் செய்கின்றேன். கால் வலிக்க தபால் நிலையம் நடந்து செல்வதும், கால்கடுக்க வரிசையில் நிற்பதும் சுகமானதாய்த் தெரிகிறது. எத்தனை கடிதங்கள்? நினைவிலில்லை. இன்னும் எழுதிக் கொண்டிருக்கிறேன். உனக்குப் பக்கம் பக்கமாய்க் கடிதம் எழுதும்போதெல்லாம், சோர்வும் உறக்கமும் கைக்கட்டிக் கொண்டு, தள்ளி நின்று இமை கொட்டாது வேடிக்கைப் பார்க்கின்றன. ஆனால் உன்னிடமிருந்துதான் இன்னும் பதிலில்லை. எப்பொழுது பதில் போடுவாய்? உன் ஞாபக மழையில் நனைந்தவாறு நானும் என் தபால் பெட்டியும்.

 

       55. கடிதம்.

 

       என் ஞாபகம்

       உன்னுள்

       எட்டிப் பார்க்கும்போது

       மறவாமல்

       கடிதம் போடு

       உன் ஞாபகத்தோடு

       என்

       தபால் பெட்டியும்.

 

 

உன் ஞாபக மழையில்.

 

மன மூலைகளின் ஏக்கங்களின் குவியல். முப்பொழுதும் தவித்துக்கொண்டிருக்கும் மனம். நினைவுகள் உன்னைச் சுற்றியே வட்டமிடும் சிட்டுகளாய். நீ என் பக்கத்திலேயே இருக்க வேண்டும். என் மணித்துளிகளைச் சில்லறைகளாய் உன்னோடு செலவு செய்ய வேண்டும். பிரிவு என்பதே நமக்குள் இருக்கக்கூடாது. பிறவிப் பயனை நான் அடைய வேண்டும் உன்னோடு சேர்ந்திருக்கும் நாட்களில். பொங்கியெழும் உணர்வுகளில் சோர்ந்துபோகும் மனம். உன்னைச் சந்திக்கும் ஒவ்வொரு மணித்துளியும் தவணை முறையில் சொர்க்கம் சென்று வரும் உணர்வு உள்ளுக்குள். நீ கொஞ்சம் தயங்குகிறாய். பார்வையால் விழுங்கிவிடும் ஊருக்கு அஞ்சுகிறாய். நம்மைச் சுற்றியே தினம் தினம் விழிகளால் நம்மைப் பருகிக்கொண்டிருக்கும் மனித கூட்டத்தைக் கண்டு மிரள்கிறாய். அதனால் நமது சந்திப்புகளுக்குத் தாளிட வேண்டுகிறாய். ஊர் வாயில் அவலாய் நாம் ஆகிவிடக் கூடாது என்று வருந்துகிறாய். உனது ஆதங்கம் எனக்குள் மிருதங்க ஒலியாய். கொஞ்சம் அவகாசம் கொடு யோசிப்பதற்கு. உன் ஞாபக மழையில் நனைந்தவாறு பதறும் மனம்.

 

       56. அவகாசம்

 

       அடிக்கடி

       சந்திக்க வேண்டாமென்று

       கெஞ்சினாய்

       ஊருக்குள்

       வெளிச்சமாகிவிடும்

       நம் காதல்

       பய உணர்வுகளோடு

       நீ

       கொஞ்சம்

       அவகாசம் கொடு

       தனிமையில்

       நான்

       சிந்திப்பதற்கு.

 

 

உன் ஞாபக மழையில்

 

கோடைக் காலம். கடுமையான சூடு. பாதங்களைப் பதம்பார்க்கும் பூமி. எங்கும் வரட்சி. மழைக்கு தவமிருக்கும் பூமி. வானம் பார்க்கும் உயிர்கள். கோடையின் ஆயுட்காலம் நெருங்கிக் கொண்டே வந்தது. பூமியின் தவம் பலித்தது. அந்தக் கோடைக் காலத்தின் இறுதி நாட்களில் வானம் போர்க்களமாய். நான்கு திசையிலும் முன்னேறிய மேகப் படைகள் வானக் கோட்டையை முற்றுகையிட்டன. மீண்டும் ஒரு மகாபாரதமாய் மிரண்ட உயிர்கள். கோடை அசுரனின் வெள்ளைக் கொடிகள் பூமியின் மீது. படையோடு பின்வாங்கிய புழுதியில் எங்கும் இருள் கவ்விக் கொண்டது. மேலே மேக தேவர்களின் வெற்றி முழக்கம். ஒன்றோடு ஒன்று கட்டித் தழுவியவாறு வான வீதியில் ஆரவாரம். மின்னலாய் வெடித்துச் சிதறும் வாண வேடிக்கை. இடியாய் முழங்கும் பீரங்கியின் முழக்கம். தேவதைகள் பனிமலர் தூவி வாழ்த்த நனையும் பூமி. உன் ஞாபக மழையில் நனைந்தவாறு மழைக்குள் நான்.

 

       57. வானம்

 

       இடியும்

       மின்னலுமாய்

       வானம்

       மிரட்டிப் பார்த்தது

       ஒரு

       கோடைக் காலத்தில்

       நனைந்தவாறு

       நான்

       உன் ஞாபக மழையில்.

 

 

உன் ஞாபக மழையில்

 

மலர்களின் மண ஆராய்ச்சியில் மனம் சலித்துப்போனது. ஒவ்வொரு மலரும் ஒரே மணத்தைத்தான் அள்ளித் தெளிக்கிறது. பழகிப்போன நாசித் துவாரங்கள். ஆனால் உன் கூந்தல் மட்டும் எப்படி மணக் கலவையை ஒன்றாய் கொட்டுகிறது? வியப்பில் மூழ்கிப்போன மனம். அந்த மணக் கலவையைத் தரம் பிரித்துப் பார்க்கும் போதெல்லாம் அடுக்கடுக்காய் தோல்விகள். உள்ளுக்குள் கேள்விக் கணைகள். எப்படி வந்தது உன் கூந்தலுக்குள் இந்த மணக்கலவை? உன் கூந்தல் நறுமலர்ச் சோலையா? ஒட்டுமொத்த சோலையின் மணத்தையெல்லாம் அள்ளி வீசுகிறதே. மல்லிகையா? தாமரையா? செண்பகமா? தெரிந்த மலர்களின் பட்டியலைக் கடந்து செல்லும் உன் கூந்தல் மணம். இறையனாரும் நக்கீரனும் வாதித்ததை நானும் விவாதிப்பதா? கரை காணா தெப்பமாய் மனம். உன் கூந்தல் மணத்தை நுகர்ந்தவாறு உன் ஞாபக மழையில் நான்.

       58. தென்றல்

 

       மெல்லியதாய்

       உரசிய தென்றல்

       உணர்வுகளை

       உசுப்பியவாறு

       என்னுள்

       வியாபிக்கும்

       மல்லிகையின்

       மணச் சொட்டுகள்

       தேடும்

       என் கண்கள்

       நீ எங்கோ

       பக்கத்தில்.

 

 

உன் ஞாபக மழையில்

 

காலம் நகர்வதே தெரியவில்லை. இரவும் பகலும் வந்து வந்து போவதுகூட நினைவிலில்லை. உன் காதல் என்னைத் தொலைத்துவிட்டது. இன்னும் என்னை நான் கண்டுபிடிக்கவே இல்லை. அந்த அவசியமும் இல்லை. நீ இருக்கும்போது என்னைப் பற்றிய கவலைகள் எனக்கு எதற்கு? என்னுள் உயிராய் நீ. நான் இயங்கிக் கொண்டிருக்கிறேன். முறிந்து விழும் காலக் கிளைகளைப் பற்றிய கவலைகள் எனக்குள் இல்லை. நிலவு மௌனமாய்த் தேய்வதைப் போல நமது இளமையும் தோய்வதாய்ச் சொன்னார்கள். யார் நம்புவது? சொன்னவர்கள் இளமையைத் தொலைத்துவிட்டு முதுமை இருட்டுக்குள் தள்ளாடிக் கொண்டிருக்கிறார்கள். நாமும் அப்படியா? அவர்கள் தொலைத்த இளமையை நாம் கண்டு விட்டோம். முதுமை இருட்டைக் கண்டு அஞ்ச வேண்டிய அவசியமில்லை. காலம் நகர்ந்தாலும், ஆண்டுகள் பேரலையாய் புரண்டாலும் நாம் என்றும் இளமையாய் நம் நினைவுகளோடு. உன் ஞாபக மழையில் நனைந்தவாறு என் இளமையை அசைபோடுகிறேன்.

 

       59. இளமை

 

       நமக்கு

       வயதாகின்றது

       என்றாய்

       எப்படி?

       உன்

       நினைவுகளோடு

       நான்

       எப்பொழுதும் இளமையாய்.

 

 

உன் ஞாபக மழையில்.

 

வெளியில் சொல்ல முடியாத வேதனை. உடம்பெல்லாம் நெருப்பாய் எரிகிறது. இருமலிலும் தும்மலிலும் சிவந்த வாய் கசந்துபோனது. வாந்தியாய் குமட்டிக் கொண்டு வெளியில் சிதறும் உணவு. நடைபிணமாய் நான். கைக் கால்கள் சங்கிலியால் பிண்ணப்பட்ட உணர்வு. தளர்ந்துபோன உடம்பு நகர முடியவில்லை. இவ்வளவு நாள் இல்லாத நோவு இப்பொழுது எப்படி வந்தது? குழம்பிப் போனேன். நேற்றைய நகர்வுகளை அலசிப் பார்த்தேன். நோய் பீடிக்கும் அளவிற்கு ஒன்றுமில்லை. இருந்தும் இந்த நோய் ஏன் வந்தது? உள்ளுக்குள் தொடரும் தேடல்கள். நினைவை ஒன்று எட்டிப் பிடித்து நிறுத்தியது. நேற்றைய பொழுதில் ஒரு சாயுங் காலத்தில் வருவதாய்ச் சொன்னாய். ஆனால் வரவில்லை. நீ வாக்குத் தவறியதில்லை. காத்திருந்த எனக்கு ஏமாற்றமில்லை. உனக்காகக் காத்திருப்பதில் ஒரு சுகம். இரவில் தகவல் சொன்னாய் உனக்கு உடல் சுகமில்லையென்று. உன் ஞாபக மழையில் நனைந்தவாறு நான் படுத்தப் படுக்கையாய்.

 

       60. நோய்

 

       உனக்கு

       நோயென்று

       செய்தி அனுப்பினாய்

       நான்

       படுத்தப் படுக்கையாய்!

 

 

உன் ஞாபக மழையில்.

 

நம் காதலுக்கும் கடலுக்கும் நெருங்கிய தொடர்பு. நாம் அங்குதானே அடிக்கடி சந்தித்துக் கொள்கிறோம். நான் இல்லாத நாட்களில் நீயும், நீ இல்லாத நாட்களில் நானும் கடலை சந்திப்பதையும், அதன் நலத்தை விசாரிப்பதையும் மறந்ததே இல்லை. நாம் தனியாக போகிற காலங்களில் ஒன்றை உணர்ந்திருக்கின்றேன். கடல் கோபித்துக் கொள்கிறது. அதன் அலைகளில் சீற்றம் தெரிகிறது. நமது பிரிவை அது ஏற்க மறுக்கிறது. நாம் ஒன்றாக செல்லும்போதெல்லாம் அதற்குள் என்ன அமைதி? எவ்வளவு சாந்தம்? மெல்லிய அலைகளால் நம்மை வரவேற்கிறது; வாழ்த்துகிறது. மௌனமாய் நமது அன்பைப் பருகுகிறது. கடலின் புன்னகைச் சிந்தும் அலைகளில் நாம் நம்மை மறந்தவாறு. சில சொற்களோடும் பல மௌனங்களோடும் நாம் நடை பயிலும் நீண்ட கரை அது. நமது பாதங்களை அன்பாக வருடும் மெல்லலைகள். நீ துள்ளும் மானாக ஒவ்வொரு அலையாக குதித்தும், மிதித்தும், தாண்டியும் செல்கின்ற அழகை உன்னைப் பின்தொடர்ந்தவாறு ஒரு இரசிகனாய் நான். உன் ஞாபக மழையில் நனைந்தவாறு அந்தக் கடற்கரை காட்சியில் மறைகிறேன்.

 

       61. மனக்கரை.

 

       கடற்கரையோரம்

       ஒரு சாயுங்காலம்

       நம்மை

       வரவேற்கும் அலைகளைத்

       தொட்டவாறு

       நீ நடந்தாய்

       என்

       மனக்கரையை

       மோதியவாறு

       உன் நினைவுகள்!

 

உன் ஞாபக மழையில்.

 

படுக்கையறை, நான் மட்டும் தனிமையில் இல்லை. என்னோடு ஒரு புத்தகப் பேழை. அது வயிறு புடைத்து நிரம்பி வழிந்தது. நூற்றுக்கணக்கான நூல்கள். சில அடிக்கடி தூசுத்தட்டப்பட்டு இன்னும் புதியதாய். பல இன்னும் திறக்கப்படாமல் நூலாம் படையோடு பிண்ணிக் கொண்டன. அதிகமாய் கவிதை புத்தகங்கள். பாரதி, பாரதிதாசன், கண்ணதாசன், வைரமுத்து, வாலி, அப்துல் ரகுமான், மேத்தா என்ற கவிஞர்களின் அணிவகுப்பு. அடிக்கடி எனது தீண்டலில் மெய்மறந்து போகும் புதுக்கவிதை தொகுப்புகள். காவி நிறத்தில் ஒரு காவியத்தையும், தண்ணீர் தேசத்தையும் எத்தனை முறை படித்திருப்பேன் என்பதே நினைவிலில்லை. புதியாய் முளைத்த மூன்றாம் உலகப் போர் ஒரு பக்கம். கவிதைகளை வாசிக்கும்போது மட்டும் மனதிற்கு சலிப்பு என்பதே தெரிவதில்லை. எவ்வளவு சோர்வாக படுக்கையில் விழுந்தாலும் சோர்வை போக்கும் அருமருந்தாக கவிதைகள். விக்கிரமாதித்தனின் வேதாளமாய் மீண்டும் மீண்டும் வாசித்ததையே வாசித்துப் பார்க்கிறேன். ஒவ்வொரு வாசிப்பிலும் வெவ்வேறு முகங்கள். இன்னும் அடையாளம் காணமுடியாத புதிராய். வாசிப்பின் தேடல்கள் தொடர்கிறது தேன் மழையில் நனைந்த உணர்வில். இனியவளே, உனது இனிமை எனது கவிதை நூல்களில் தெரிகிறது. ஒவ்வொரு வரியிலும் பிறையாய் உன் முகம் எட்டிப் பார்க்கிறது. இரவின் தனிமையில், உன் ஞாபக மழையில் நனைந்தவாறு கவிதை நூலின் ஒவ்வொரு பக்கமாய் நேர்த்தியாய் நகர்த்துகின்றேன்.

 

       62. உன் முகம்

 

       கவிதை புத்தகங்கள்

       ஒவ்வொரு

       பக்கமாய்

       நேர்த்தியாய்ப் புரட்டினேன்

       ஆவலோடு

       ஓர் இரவின்

       தனிமையில்

       எல்லா பக்கங்களிலும்

       பிறையாய்

       எட்டிப் பார்க்கும்

       உன் முகம்.

 

 

உன் ஞாபக மழையில்.

 

இந்தக் காதலுக்கு ஒரு புண்ணியம் இருக்கிறது. உன் காதல் தென்றலில் எனது உணர்வுகள் உரசியபோது என் எண்ணங்கள் மரமாய் அசையத் தொடங்கின. நீ கடவுள் நம்பிக்கை உடையவள். அதனால் எனக்கும் கடவுள் நம்பிக்கை அதிகமாகியது. நீ ஒவ்வொரு நாளும் தொழும் அதே தெய்வத்தைத்தான் நான் இடைவிடாது தொழுகிறேன். காலையும் மாலையும் வந்துபோகும் வழிபாட்டு முறைகள். ஒரு நேர்த்தி. என்னை நெறிபடுத்திக் கொள்கிறேன். எனது தொழுகைகளில் இப்பொழுதுதான் கடவுள் காட்சியளிக்கிறார். உண்மையானவனாய் நான்; ஒரு நேர்மையான வாழ்க்கை. கடவுளின் கொடுப்பதற்கு ஒரு நீட்டோலை கிடையாது. எதிர்பார்ப்புகளுக்கு அப்பாற்பட்ட பக்தனாய் நான். ஆலயங்களை நோக்கிப் பயணப்படும் எனது பாதங்கள். சுழற்றிய புதிய காலணிகளெல்லாம் இப்பொழுது நினைவை முட்டுவதில்லை. என்னை மறந்தவனாய் நான் மெய்ஞானத்தின் வாசல் கதவுகளைத் தட்டியவாறு. எனது தொழுகைகளில் நான் கடவுளுக்கு நன்றி கூறுவதற்கு மறந்ததேயில்லை, உன்னை எனக்கு அடையாளம் காட்டியமைக்கு. எனக்குள் ஒரு காதல் தீபத்தை ஏற்றியமைக்கு. உன் ஞாபக மழையில் நனைந்தவாறு பரவசத்தைத் தேடியவாறு மனம் ஒரு ஆலய வாசலில்.

 

       63. பக்தன்

 

       ஒரு வெள்ளிக்கிழமை

       கோவிலுக்குப்

       போயிருந்தேன்

       நீயும்

       வந்திருந்தாய்

       அன்று நான்

       முழு பக்தனாய்.

 

உன் ஞாபக மழையில்.

 

ஓரிரு நாட்கள் நீ என்னைக் காண வரவில்லையென்றால், பல யுகங்களாய்க் கழிகின்ற வேதனை. உன்னைப் பார்க்காமலும், என் மொழியை உன்னோடு பகிர்ந்து கொள்ளாமலும் நாட்கள் நகர்வதாய்த் தெரியவில்லை. உன்னைத் தேடியவாறு உன் வீட்டின் வாசல்வரை வந்தேன். பரபரக்கும் கால்களும் துடி துடிக்கும் கண்களும் அவசர சுழலில் என்னைச் சிக்கியவாறு. எவ்வளவு அழகான வாசல்; உன் மனம்போல. குப்பைப் பருக்களே இல்லாத வாசல்; உன் தூய்மையான மனம்போல. உன் எண்ணங்களின் நெளிவு சுழிவுகள் வாசலின் கோலத்தில் ஒளிக்கதிர்களாய். கால்கள் பூட்டிக் கொண்டன.

No comments:

Post a Comment