Thursday, 24 March 2011

தமிழீழக் கவிதைகள்

மேகங்கள்

எங்கேயோ
தூறல் போட்டுவிட்டு
எங்கள்
காய்ந்த மண்ணைக்
கடக்கும்
உலர்ந்த மேகங்கள்
எங்கள்
எதிர்ப்பார்ப்புகளைப்
போலவே.
****************
சுதந்திரம்

சுதந்திரத்தைப்
பற்றிய கனவு
எங்கள்
உறக்கங்களில் கூட
வருவதில்லை
ஏனென்றால்
நாங்கள்
உறங்கியே
பல ஆண்டுகளாகிறது.
****************
வெளிச்சம்
தந்தையின்
கல்லறையில் பையன்
சின்னதாய்
கண் சிமிட்டும்
விளக்கு
கண்களில்
வெளிச்சப் படலம்.
****************
வளைக்காப்பு
மூத்தப் பெண்ணுக்கு
வளைக்காப்பு
வளையல்களில்லை
சில் தோட்டாக்களும்
ஒரு துப்பாக்கியும்.
****************
கீறல்கள்
அவர்கள்
காயங்களைக்
கீறிப்பார்க்கிறார்கள்
வாழ்வின்
அவலங்கள்
எட்டிப் பார்க்கின்றன
மற்றவர்களோ
அவர்களின்
சாயங்களைக்
கீறிப்பார்க்கிறார்கள்
வாழ்வின்
வெறுமைகள்
வெறித்துப் பார்க்கின்றன.
**********************
மரம்
ஒரு முறையாவது
இங்கே
கால் பதித்துப்பார்
உன்னுள்
இருக்கின்ற
வீர விருட்சங்கள்
ஒரே நாளில்
மரங்களாகும்.
********************
படைகள்
அவர்கள்
ஆயுதங்களச்
சுமந்து கொண்டு
படைகளாக.......
நாங்கள்
உடைமைகளைச்
சுமந்து கொண்டு
கால்நடைகளாக....
********************
இரத்த தானம்
ஒரு
சாயுங்காலத்தில்
சலவை செய்த
அடி வானத்திற்கு
எங்கள்
வீரர்களின்
இரத்த தானம்...
*******************
யாசிப்பவன்
யோசித்துப் பார்க்கிறேன்
யாசிப்பவர்களின்
சாசனங்களைப்
படையலிடுவதற்கு
அதனால்
தமிழிடம்
நானும்
யாசிக்கின்றேன்
அவலங்களை
அடையாளம் காட்டும்
அமுத சொற்களுக்கு...
***********************
குவியல்
எத்தனை
யுகங்களாய்
சுதந்திர வேள்வியை
வளர்க்கின்றோம்
இன்னும்
அணையாமல்
வேள்விப் பொருள்களின்
குவியல்!
மனித உடல்கள்.
**********************
பண்பாடு
நமக்கு
மட்டும்தான்
பண்பாடும்
நாகரிகமும்
அதனால்தான்
நம்மைச் சுற்றி
நாடோடிகளின்
நாச வேலைகள்
************************
ருசித்தவர்கள்
எங்களது
தேயிலையை
ருசித்தவர்களுக்கு
எங்கள்
உரிமைக் குரலை
ரசிக்கத் தெரியவில்லை.
***********************
பிரசவம்
இருள் வானத்தின்
நிசப்தத்தை
கிழித்தெறிந்தது
பிரசவித்த
பச்சிளம் குழந்தை!
கால் வயிற்றுப்
பாலுக்காக அல்ல!
காலங் காலமாய்
பசித்திருக்கும்
வர்க்கத்திற்காக!
**********************
நிழல்
கதறுகிறாள்
கணவனை
இழந்த தாய்!
கண்ணீர்
துடைத்தப்
பிஞ்சுக் கரங்களின்
மெல்லிய குரல்!
அழாதே
நான் இருக்கிறேன்.
*********************
கடந்தது
நாங்கள்
ஏடுகளைக்
கடந்ததை விட
காடுகளைக்
கடந்ததுதான்
அதிகம்.
*********************
தீக்குச்சி
தீப்பெட்டிக்குள்
தீக்குச்சிகள்
கூர் வாளுடன்
சின்னக் குழந்தை.
**********************
விடிவதற்குள்
பதியே
விடிவதற்குள்
வந்துவிடு
பையனுக்குத்
துப்பாக்கி வேண்டுமாம்.
**********************
நிதானம்
தெருமுனையில்
விடைபெறும்போது
பையனின்
அழுகுரல்
சற்று நிதானித்த
தந்தையின் குரல்
"நீ
நாளை போகலாம்"
*********************
தலையெழுத்து
நிகழ்கால
கல்லறைகளில்
எதிர்காலத்தின்
தலையெழுத்து.
********************
கொடி
கண்ணா!
பாஞ்சாலிக்கு
ஒரு சேலை
கொடுத்தாயே!
அதில்
கொஞ்சமாவது
எங்களுக்கும்
கிழித்துக் கொடு!
எங்கள்
கொடிக்கம்பமும்
நிர்வணமாய்!
********************

3 comments:

  1. எங்களது உரிமைக் குரலை எழுப்பும் உங்களது இனிமை குரல்...
    குணாளன், படிவம் 6/2011...

    ReplyDelete
  2. கவிதை

    என்
    மனவானத்தில்
    எப்பொழுதாவது
    சிறகடிக்கும்
    பறவையாய்

    மெல்ல
    அடிவானத்தில்
    எட்டிப் பார்க்கும்
    சூரியன்.

    ReplyDelete
  3. என் கனவும்
    இன்னும்
    விழித்திருக்கிறது

    உனது
    வருகைக்காக

    நேற்றைய
    இரவுகளில்
    உறக்கத்தில்
    என்னை நான்
    தொலைத்துவிட்டேன்

    அதனால்
    இன்றைய இரவில்
    உன்னைத் தேடியவாறு

    என் கனவுகள்

    ReplyDelete