அப்பா இல்லாத தீபாவளி
அப்பொழுது இல்லாத வலி
இப்பொழுது
எங்கிருந்து வந்தது
வெள்ளி முளைக்கும்
ஒரு தீபாவளி
தீபாவளி நெருக்குதல்
அக்கம் பக்கமெல்லாம்
ஒரே பரபரப்பு
ஆர்பரிப்பு
பட்டாசுகளும் வானவேடிக்கைகளும்
வெறுச்சோடி கிடந்தது
என் வீடும்
என் மனமும்
எனக்குள் எல்லாமே சூன்யமாய்
நாற்பத்து ஐந்து ஆண்டுகள்
எத்தனை தீபாவளிகள்
அப்பாவோடு
ஞாபக நாட்களில்
இன்னும் பசுமையாய் ஒட்டிக்கொண்டிருக்கிறது
என்னிடமும்
இந்த மண்ணிடமும்
சொல்லிக் கொள்ளாமல்
அப்பா அவசர அவசரமாய்
விண்ணுலகத்திற்கு
விடைபெற்ற
இந்த ஆண்டு
இந்த தீபாவளியல்ல
எல்லா தீபாவளிகளையெல்லாம் கூடவே
கொண்டுபோய் விட்டார்
நினைத்துப் பார்க்கிறேன்
ஒருமுறையாவது
அவருக்கு
நன்றி சொல்லியிருக்கிறேனா?
வேள்வியாய்த் துடிக்கும்
மனம்
கடந்த தீபாவளிகளை
அசைபோட்டவாறு
ஆசை ஆசையாய்
அவர் வாங்கிக் கொடுத்த
அந்தப் புத்தாடைகள்
எனக்குப் பிடித்ததோ
நினைவிலில்லை
அவருக்குப் பிடித்திருந்தது
ஒன்றே ஒன்று என்று
எனக்கு
எத்தனை சலுகைகள்
அன்பாய் அவர்
தட்டிவிட்ட பொழுதெல்லாம்
நொந்து போனவன்
இப்பொழுது
நினைத்துப் பார்க்கிறேன்
இந்த உச்சத்தில்
நான் ஏறிநிற்கும்
ஏணிப்படிகள்தான் அவை
அந்த வடுக்கள்
நேற்றோடு
காணாமல் போனது
அவரில்லா ஓர் ஏக்கத்தில்
அப்பாவின்
அந்தச் சின்ன வீடு
எத்தனை முறை
ஏளனமாய் வெறித்திருக்கிறேன்
வசதிகளே இல்லை என்ற
என்னுடைய குற்றச் சாட்டு
உள்ளுக்குள் முள்ளாய்த் தைக்கிறது
அது ஒரு குருவிக்கூடு
அப்பாவும் அம்மாவும்
உடன் பிறப்புகளோடு நானும்
அன்புச் சங்கிலியில்
கட்டிப்போட்டது
ஒவ்வொரு நாளும்
அந்த வீட்டுக்குச் சென்று
திரும்பும்போதெல்லாம்
அப்பாவின் நினைவுகள்
எனக்குள் உயிர்த்தெழுகின்றன
வீட்டின்
ஒவ்வொரு மூலையும்
மௌனமாய் ஊடுருவும்போது
இப்போதுதான்
அதன் நேர்த்தியும்
அப்பாவின் உழைப்பும்
கண்ணில் படுகிறது
அப்பா சிந்திய
வேர்வைத்துளிகளின் மணம்
இன்னும் காற்றில் கலந்து
அந்தச் சின்ன வீட்டிற்குள்
தோரணமாய்
சுண்ணாம்புக் கற்களைக்
கொதிக்கவைத்து
நான் விரும்பிய வண்ணத்தில்
தோய்த்து
சுவர்களுக்குப் பூசிய
அந்த ஒவ்வொரு ஆண்டும்
அடுக்கடுக்காய் மனத்திரையில்
இன்னும்
சந்தனம் பூசிக்கொண்டிருக்கிறது
அன்றைய நாட்களில்
சரவெடிகளுக்குப் பயந்து
தள்ளி நின்று வேடிக்கைப் பார்த்த
பயவுணர்கள்
இடம் தெரியாமலேயேபோனது
அப்பா என் கைகளைப் பிடித்து
தைரியத்தைப் பற்றவைத்தபோது
சைக்கிள் பயணத்திலேயே
அவருடைய
பாதி ஆயுள் கழிந்தது
நல்ல ஆரோக்கியத்தோடு
பின்னால் உட்கார வைத்து
மூச்சிறைக்க
அவர் பயணித்த
அந்த மலைப்பகுதிகள்
இன்னும் எனக்குள் மலையாய்
இத்தனை தீபாவளிகளை
நான் அவரோடும்
அவர் என்னோடும்
மகிழ்ச்சிப் பகிர்வுகள்
பட்டியலுக்கு அப்பால்
இன்று
அப்பா என்னோடு இல்லை
நான் மட்டும் தனிமையில்
அர்த்தம் தொலைந்துபோன
ஒரு தீபாவளி
பொலிவிழந்த
என்னுடைய பெரிய வீடு
புத்தாடைகள் இல்லை
புத்தாடைகளும் இல்லை
பதார்த்தங்களின் மணமும் இல்லை
இன்னும்
அந்தச் சின்னவீடும்
அப்பாவின் நினைவுகள் மட்டும்
இந்தத் தீபாவளி இரவில்
அகலாய்
மனதிற்குள்
ஒளி பிழம்பாய்ச்
சுடர் வீசுகிறது.
கோவி. மணிமாறன், டேச இண்டா, நீலாய்
No comments:
Post a Comment